நெல்லையை அடுத்த பேட்டை மயிலப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை ராஜ். 52 வயதான இவர் அ.தி.மு.க பிரமுகர் ஆவார். பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். கடந்த மாநகராட்சி தேர்தலின்போது பிச்சைராஜ் நெல்லை மாநகராட்சியின் 18-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பேட்டை பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்த அவர், நேற்று (24-ம் தேதி) இரவில் வழக்கம் போல டாஸ்மாக் பாரை பூட்டிவிட்டு பைக்கில் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது இருட்டுக்குள் பதுங்கியிருந்த கும்பலைச் சேர்ந்த சிலர் வழிமறித்து அவரிடம் தகராறு செய்திருக்கின்றனர்.
பின்னர் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை அரிவாளால் வெட்டிச் சாய்த்திருக்கின்றனர். அந்த வழியாகச் சென்ற சிலர் இந்தச் சம்பவங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். விரைந்து சென்ற போலீஸார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த பிச்சைராஜூக்கு மனைவி ஒரு மகன், மகள் இருக்கின்றனர். அவரை கொலைசெய்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாகவோ அல்லது டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறு மூலம் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதனால் விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.