தமிழ் சினிமாவில் ஃபிலிம் கோலோச்சிய காலங்களில் படத்தொகுப்பாளராக சாதனை பண்ணினவர் எடிட்டர் ஆர்.விட்டல். நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91.
நடிகர் திலகம் சிவாஜி நடித்த 18 படங்கள், கமல் நடிப்பில் 10 படங்கள், ரஜினி நடிப்பில் 33 படங்கள், ஜெய்சங்கர் நடிப்பில் 18 படங்கள் என 170 படங்களுக்கு மேல் எடிட்டராகப் பணியாற்றிவர் விட்டல். இயக்குநர்கள் கிருஷ்ணன் -பஞ்சு, எஸ்.பி.முத்துராமன் பலரின் ஆஸ்தான எடிட்டராக இருந்தவர். அதிலும் ஏவிஎம் தயாரிப்பில் 40 படங்களுக்கு மேல் எடிட்டிங் செய்து சாதனை படைத்திருக்கிறார். அவரது மறைவு குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டேன். விட்டல் அவரது பள்ளி தோழர் என்பதால் மீளாத் துயருடன் பேசினார் எஸ்.பி.எம்.

”ஒரு இயக்குநருக்கும், படத்தொகுப்பாளருக்குமான உறவு என்பது கணவன்- மனைவி உறவு மாதிரிதான். கிட்டதட்ட 67 வருஷ நட்பு எங்களோடது. விட்டல் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரோடு 71 படங்களுக்கு இணைந்து பணியாற்றினது சாதாரணது அல்ல. எங்க ரெண்டு பேருக்குமான புரிதல் இருந்ததால் தான் இவ்வளவு படங்கள் வேலை செய்ய முடிஞ்சது. ரொம்ப கடின உழைப்பாளி. எங்க குழுவில் ஒரு தூண் அவர். நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வார். மூணு நாட்கள், வீட்டுக்கு போகாமல்கூட எடிட் பண்ணிட்டு இருப்பார்.
என்னோட முதல் படத்துல இருந்து அவர்தான் பணியாற்றினார். அதுக்கு முன்னாடியே ஏவிஎம் -ல நாங்க ஒண்ணா வேலை செஞ்சிருக்கோம். இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு இவங்கள்ல பஞ்சு சார், எடிட்டர். அவரோடு சேர்ந்து விட்டலும் எடிட்டிங்ல இருப்பார். ஏவிஎம்ல மட்டும் 40 படங்கள் ஒர்க் பண்ணியிருக்கார். எல்லாமே ஃபிலிம் எடிட்டிங். அப்ப மூவியாலா மெஷின் வச்சுத்தான் வேலை செய்வோம். விட்டலின் உழைப்பு பிரமிக்க வைக்கும். எடிட்டிரா மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்திருக்கார். ‘முத்தான முத்தல்லவோ’, ‘பெண்ணைச் சொல்லி குற்றமில்லை’, ‘முடிசூடா மன்னன்’னு மூணு படங்கள் தயாரிச்சிருக்கார். ‘.வீட்டுக்கு வந்த மருமகள்;’, ‘உன்னைத்தான் தம்பி’, ‘எங்களுக்கும் காதல் வரும்’, ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’, ‘முத்தான முத்தல்லவோ’னு ஐந்து படங்களை இயக்கியும் இருக்கார்.
படம் தொடங்கினதில் இருந்து படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்துட்டு இருக்கும் போதே, எடிட்டிங் வேலைகளும் இன்னொரு பக்கம் ஆரம்பிச்சிடுவோம். 15 நாட்கள்ல பாசிட்டிவ் ரெடியாகிடும். அப்புறம்தான் டப்பிங், இசை வேலைகள் நடக்கும். நானும் அவரும் ஏவிஎம். ஸ்கூல்னால, என் டேஸ்ட் அவருக்கு தெரியும். அவரோட ரசனை எனக்கு தெரியும். அதனால ஷூட் பண்ணிட்டு ஃபிலிமை அவர்கிட்ட கொடுத்தால் போதும், நான் எதிர்பார்க்கற மாதிரியே படத்தை எடிட் பண்ணி முழு வடிவம் கொடுத்திடுவார். எங்க யூனிட்டிற்கு ஒரு தூணாக இருந்தார்.

அவரோட வேலை செய்ததை நன்றியுடன் நினைவுகூர்கிறேன். அவரோட உழைப்பினால் தான் வெற்றி அவரைத் தேடி வந்திருக்கு. இந்த தலைமுறையினர் அவரது கடின உழைப்பைப் பின்பற்றினாலே, முன்னேறிடுவாங்க. நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்தால், வெற்றி நிச்சயம்னு உணர்த்தியிருக்கார். ஏன்னா, 170 படங்கள் எடிட்டிங் என்பது பெரிய விஷயம். திரைத்துறையின் ரோல் மாடல் அவர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும். – என்ற குறளுக்கு சாட்சியாக வாழ்ந்துட்டு போயிருக்கிறார் விட்டல்.” கண்களில் ஈரம் கசிகிறார் இயக்குநர் எஸ்.பி.எம்.