புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூலை) 20ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற மக்களவையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீதான விவாதம் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடந்த நிலையில், இன்று (11.08.2023) கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இந்த கூட்டத்தொடர் 23 நாட்கள் 17 அமர்வுகளை கொண்டதாக அமைந்தது.
இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மக்களவையில் 20 மசோதாக்களும், மாநிலங்களவையில் 23 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அனுமதியுடன் தலா ஒரு மசோதா திரும்பப் பெறப்பட்டது. கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மொத்த மசோதாக்களின் எண்ணிக்கை 21 ஆகும்.
மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னர் குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட டெல்லி அவசரச் சட்டம் 2023-க்கு மாற்றாக, மசோதா இரு அவைகளால் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் கௌரவ் கோகாய் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சுமார் 20 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. 7 அமைச்சர்கள் உட்பட 58 உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். இதற்கு பிரதமர் மோடி பதிலளித்தார். அதன் பின்னர் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் அவையில் நிராகரிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாட்டுத் திறன் உத்தேசமாக 44 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாட்டுத்திறன் தோராயமாக 63 சதவீதமாகவும் இருந்தது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.