இதென்ன பெங்களூருவிற்கு வந்த சோதனை? கிடுகிடுனு எகிறும் ஹீட்… ஆமா, மழையை காணோம்!

தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டாலே கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு ஒரே ஜாலி தான். ஜில் ஜில் கிளைமேட்டில் மக்கள் உற்சாக மூடிற்கு சென்றுவிடுவர். பெங்களூரு நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியிருந்தாலும், பரவலான மழையை சமாளிக்க தவறியதில்லை. கனமழை தான் பிரச்சினையே. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என நான்கு மாதங்களும் தென்மேற்கு பருவமழை காலம் தான்.

பெங்களூரு வானிலை

கடந்த இரண்டு மாதங்கள் ஓகே ரகமாக இருந்தது. வெளுத்து வாங்கி விட்டது. ஒரே நாளில் பெரிய சம்பவங்களை எல்லாம் நிகழ்த்தி காட்டியது. நடப்பு மாதம் தொடங்கியதும் நிலைமை தலைகீழ் ஆனது. எங்கடா மழை? எனத் தேடும் அளவிற்கு வானிலை வறண்டு கிடக்கிறது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 40 சதவீத அளவிற்கு மழை பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்துவிட்டது.

ஆகஸ்ட் மாத பருவமழை

இன்னும் ஒருவாரத்திற்கு இப்படித் தான் என்று பெரிய குண்டை தூக்கி போட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதன்பிறகு ஓரிரு இடங்களில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் எனக் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை தற்போது கர்நாடகாவில் வலுவிழந்து காணப்படுகிறது. கடலோர மற்றும் உட்புற மாவட்டங்களில் கொஞ்சம் பரவாயில்லை. பெங்களூருவை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை 24.3 மில்லிமீட்டர். ஆனால் பெய்ததோ 10.8 மில்லிமீட்டர்.

சிரமத்தில் லால்பால் மலர் கண்காட்சி

ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தற்போது 30 டிகிரியை தாண்டிவிட்டது. இப்படியே போனால் கொஞ்சம் கஷ்டம் தான் என்கின்றனர் பெங்களூருவாசிகள். கடந்த இரண்டு வார காலமாக லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை ஒட்டி, சரியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி முடியும் வகையில் ஏற்பாடு செய்வர்.

ஊழியர்கள் பெரும் சிரமம்

இதில் சுமார் 10 லட்சம் பூக்களால் பல்வேறு விதங்களில் அலங்கரித்து வைப்பர். இதை பல நாட்களுக்கு புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது தென்மேற்கு பருவமழை தான். இம்முறை மழை ஏமாற்றியதால் கண்காட்சி நிர்வாகத்தினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஈரப்பதத்தை நிலைநிறுத்த படாத பாடு பட வேண்டியதாகி விட்டது.

மீண்டும் எப்போது மழை தொடங்கும்?

இந்த சூழலில் ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதியில் பருவமழை பழைய ஃபார்முக்கு வந்துவிடுமாம். அதன்பிறகு பெங்களூரு மழையை கொண்டாடி தீர்க்கலாம். அதற்குள் மழைநீர் வெளியேற உரிய வடிகால் வசதிகளை செய்து தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகவும் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.