`உத்தவ் ஒரு ராவணன்’ – ஷிண்டே… `ஜெனரல் டயர் போன்ற ஆட்சி’ – தாக்கரே… அதிரடித்த `தசரா’ உரைகள்!

தசராவையொட்டி மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரேயும், ஆசாத் மைதானத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். ஒவ்வொரு ஆண்டும் உத்தவ் தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கில் உரையாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, ”நாட்டில் தற்போது இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தனிக்கட்சி ஆட்சி எதேச்சதிகாரத்துடனும், மிருகத்தனமாகவும் நடந்து கொள்கிறது. எனவே பெரும்பான்மை பலத்துடன் தனிக்கட்சி ஆட்சி தேவையில்லை. அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய கூட்டணி ஆட்சி இப்போது நாட்டிற்கு தேவை என்று நினைக்கிறேன்.

உத்தவ் தாக்கரே

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாறவேண்டும். வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தாராவியையும் அபகரிக்க திட்டமிடுகின்றனர். தாராவி மேம்பாட்டுத் திட்டம் உங்கள்(மோடி) நண்பருக்காக செயல்படுத்துவது போல் தெரிகிறது. அதை நடக்க விடமாட்டோம். மும்பையை கொள்ளையடிப்பதும், அதனை கட்டுப்படுத்துவதும் பா.ஜ.க-வின் நோக்கம். அவர்களால் மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க முடியாது. மும்பையின் சுயாட்சியை அழிக்க பார்க்கின்றனர்.

சத்ரபதி சிவாஜி குஜராத்தில் இருக்கும் சூரத் மீது படையெடுத்தார். அதற்கு பழிவாங்க இப்போது மும்பை, மகாராஷ்டிரா கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பை உட்பட மகாராஷ்டிராவில் இருந்து அனைத்து நல்ல நிதி நிறுவனங்களும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால் மும்பை நாட்டின் பொருளாதார தலைநகரமா என்று சந்தேகமாக இருக்கிறது. இட ஒதுக்கீடு கேட்டு போராடிய மராத்தா இன மக்கள் மீது ஜாலியன் வாலா பாக் போன்று ஷிண்டே அரசு தடியடி நடத்தியுள்ளது. ஜெனரல் டயர் அரசைப்போன்று நடந்து கொண்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் பதவிப்பறிப்பு மனு மீதான விசாரணையை சபாநாயகர் ஒரு ஆண்டாக தேதி கொடுத்துக்கொண்டே இருக்கிறார். சபாநாயகர் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்படவில்லையெனில் சுப்ரீம் கோர்ட் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துவிடும். சுப்ரீம் கோர்ட்டும் ஒவ்வொரு முறையும் சபாநாயகரை விமர்சிக்கிறது. எப்போது முடிவு செய்யவேண்டுமோ அப்போது முடிவு செய்யுங்கள். காரணமே இல்லாமல் எங்களது கட்சியினர் மீது கைவைத்தால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது மேலிருந்து கீழாக தொங்கவிடுவோம்” என்று தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே

ஆசாத் மைதானத்தில் பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ”உத்தவ் தாக்கரேயிக்கு 2004ம் ஆண்டில் இருந்தே முதல்வராகவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஒவ்வொரு முறையும் முதல்வர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொள்வார். சரத்பவாரின் ஆலோசனையின் பேரில் வெளிப்படையாக முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்கள். ஆனால் உண்மையில் முதல்வர் பதவிக்கு உத்தவ் தாக்கரே பெயரை பரிந்துரைக்க இரண்டு பேர் கொண்ட கமிட்டி சரத்பவாரிடம் சென்றது. ராவணன் சீதையை கடத்திச் சென்றது போல் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை பறித்தார். அவருக்கு(உத்தவ்) பல முகங்கள் உண்டு” என்றார்.

2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவி யாருக்கு சொந்தம் என்பதில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கூட்டணி உடைந்தது. இதனால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் துணையோடு உத்தவ் முதல்வரானார். ஆனால் உத்தவ் அரசு கடந்த ஜூன் மாதம் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கவிழ்ந்துவிட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.