பல தொழில்நுட்ப நிறுவனங்கள் கோவிட் சமயத்தில் இருந்தே தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கேமிங் நிறுவனங்கள் என இதன் நீட்சி சென்றது.
அதிலும் குறிப்பாகக் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் (Byju’s) சமீபத்தில் 4,000 முதல் 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சர்வசாதாரணமாக பணிநீக்க செயல்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 23 தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரித்து வரும் `layoff.fyi’ வலைதளம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, “உலகளவில் 2,120 தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை 4,04,962 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
2022-ம் ஆண்டில், 1,061 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1,64,769 ஊழியர்களை வெளியேற்றி உள்ளன. மேலும் 2023-ம் ஆண்டில் 1,059 நிறுவனங்கள் அக்டோபர் 13 வரை 2,40,193 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன. ஜனவரி 2023-ல் மட்டும் 89,554 தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
2022-ம் ஆண்டு தொடங்கிய பணிநீக்க நடவடிக்கைகள் 2023-ன் தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. ஆனால், சமீப காலங்களில் பணிநீக்க நடவடிக்கைகள் குறைந்த போதும், இன்னும் முடிவுக்கு வரவில்லை.

கடந்த மாதம் மட்டும் பொருளாதார மந்தநிலை, புதிய திட்டமிடல் போன்ற காரணங்களுக்காக 4,632 தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சராசரியாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தினமும் சுமார் 555 ஊழியர்கள் அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 23 தொழிலாளர்கள் வேலையை இழக்கிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளது.
நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து உங்களின் கருத்தென்ன?!… கமெண்டில் சொல்லுங்கள்!