விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி நடத்தி வருகிறார். தற்போது, இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தீபாவளி விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்த இவர், தனது மனைவி (காளீஸ்வரி) மற்றும் தனது ஐந்து வயது மகன் (குருசக்தி) அழைத்துக்கொண்டு நேற்று முந்தினம் மாலை (12-ந்தேதி) 4 மணிக்கு அளவில் தெற்குவெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.

அப்போது சிவக்குமாரின் இடத்துக்கு அருகே 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சிவக்குமார், மது அருந்திக் கொண்டிருந்தவர்களை அங்கிருந்து செல்லுமாறு சத்தம் போட்டு விரட்டியுள்ளார். அந்தசமயம் அங்கிருந்தவர்கள் எதுவும் சொல்லாமல் சென்றதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் கழித்து, சிவக்குமார் தன் குடும்பத்தானருடன் வீடு திரும்பினர். அப்போது செல்லும் வழியில், அடையாளம் தெரியாத நான்கு பேர் சிவக்குமாரின் டூவீலரை இடைமறித்துளள்னர். தொடர்ந்து, டூவீலரிலிருந்து சிவக்குமாரை கீழே தள்ளியவர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆனாலும் ஆத்திரமடங்காத கும்பல், மனைவி கண் முன்னே சிவக்குமாரை, தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. பலத்த வெட்டுக்காயத்தால் சிவக்குமார் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, சிவக்குமாரின் மனைவி அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சிவகுமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிவக்குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது அருந்தியதை தட்டி கேட்டதற்காக ஆத்திரமடைந்த கும்பல் குடிபோதையில் வெட்டி கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.