மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை பெருமளவு பாதித்ததைப் போல, குமரிக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் ஏற்பட்ட கனமழை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் திருநெல்வேலியும், தூத்துக்குடியும் அதிக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் இயக்குநர் மாரிசெல்வராஜும் திருநெல்வேலி மாவட்டத்தில் மீட்புப் பணி ஆய்வில் உடன் இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியுடன் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,”பேரிடர் காலங்களில் நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த அனுபவமும் இல்லாத மகனை, களத்தில் இறக்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர். நிதியமைச்சரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தனது படத்தை இயக்கிய மாரி செல்வராஜுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தன்னுடைய ஆய்வுக்கெல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆக்ஷன் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்” எனக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.

அமைச்சர்களுடன் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அதிகாரிகளை திரைப்பட இயக்குநர் வேலை வாங்குகிறார் என்று சிலர் விமர்சனம் செய்தனர். இதற்கிடையில், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில், “வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார். ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவிய மாரி செல்வராஜ் கோமாளியாக சித்தரிக்கப்படுகிறார். வெறுப்பு அரசியல்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
“என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது”#southrain pic.twitter.com/y317B85Xj0
— Mari Selvaraj (@mari_selvaraj) December 20, 2023
இதைத் தொடர்ந்து, தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் மாரி செல்வராஜ், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.