துபாயில் இருந்து 303 இந்தியர்களுடன் நிக்கராகுவா நாட்டிற்கு புறப்பட்ட விமானம் பிரான்சில் தரையிறக்கம் – போலீசார் விசாரணை

பாரிஸ்,

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்றுகொண்டிருந்தது.

இதனிடையே, துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது, விமான நிலையம் வந்த பிரான்ஸ் போலீசார், பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். துபாயில் இருந்து ஒரு விமானத்தில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிக்கராகுவா நாட்டிற்கு செல்வது குறித்து சந்தேகமடைந்த பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாயில் இருந்து ஒரே விமானத்தில் வெளிநாட்டிற்கு செல்வது மனித கடத்தல் தொடர்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போதுவரை விசாரணை நீடித்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.