India Women National Cricket Team: அனைவரும் நாளை மறுநாள் (டிச. 26) நடைபெற உள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா ஆடவர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நோக்கி காத்திருக்கும் நிலையில், இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதாவது ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக முதல்முறையாக இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஒரே ஒரு டெஸ்ட்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நான்கு நாள் (டிச. 21 – டிச. 24) டெஸ்ட் போட்டியில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, அலீசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 219 ரன்களை அடித்து ஆஸ்திரேலியா ஆல்-அவுட்டானது. அதில் அதிகபட்சமாக தஹிலா மெக்ராத் 50 ரன்களை அடித்தார். இந்திய அணி பந்துவீச்சில் பூஜா வஸ்திரகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
Special Test Wins
Special Selfies
Special Team
P.S. – Jemimah Rodrigues’ selfie game is spot#TeamIndia | #INDvENG | #INDvAUS | @IDFCFIRSTBank | @JemiRodrigues pic.twitter.com/m76Q7limFF
— BCCI Women (@BCCIWomen) December 24, 2023
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 406 ரன்களை குவித்தது. அதில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 78 ரன்களையும், ஸ்மிருதி மந்தனா 74 ரன்களையும், ஜெமிமா 73 ரன்களையும் எடுத்தனர். கார்ட்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஆஸ்திரேலிய தரப்பில் 8 பேர் பந்துவீசினர். தொடர்ந்து, பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய தரப்பில் மெக்ராத் அதிகபட்சமாக 73 ரன்களை அடிக்க இரண்டாவது இன்னிங்ஸில் 261 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
INDW vs AUSW: வரலாற்று வெற்றி
அதன்மூலம், 75 ரன்கள் இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்த நிலையில், மந்தானாவின் அதிரடியால் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்ஸிலும் ஸ்னே ராணா மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார். அதுமட்டுமின்றி, இந்தியா முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது.
வெற்றிக்கு பின் இந்திய அணி வீராங்கனைகள் வெற்றி கொண்டாட்டாத்தில் மூழ்கினர். போட்டிக்கு பின் பேசிய ஹர்மன்பிரீத் கௌர்,”இத்தனை வருடங்களாக நாங்கள் செய்த கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது. எங்கள் அணியின் அனைத்து ஊழியர்களும், குறிப்பாக எங்களின் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் ஆகியோருக்கு நன்றி சொல்லியை ஆக வேண்டும்.
நாங்கள் அனைத்தையும் மிகவும் எளிமையாக வைத்திருக்க முயற்சித்தோம். இது கடின உழைப்பிற்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசாகும். பாஸிடிவாக அணுகி கிரிக்கெட்டை விளையாடினால் அது எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் பல ஆண்டுகளாக இந்த அணியுடன் விளையாடி வருகிறோம், அங்கும் இங்கும் கொஞ்சம் முன்னேறினால் போதும்.
இதயத்தை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன்
முதலில் இந்த வாய்ப்பை வழங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், இரண்டாவதாக எங்கள் தேர்வாளர்கள் அனைவருக்கும், அவர்கள் எங்களுக்கு சிறந்த அணியை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு வீராங்கனைகள் மீதும் அவர்கள் நம்பிக்கையைக் காட்டியுள்ளனர். எல்லோரும் ஒன்றாக இணைந்து வேலை செய்தால், நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். வரும் ஆண்டுகளில் இன்னும் பல டெஸ்ட் போட்டிகளை விளையாடுவோம் என்று நம்புகிறோம்” என்றார்.
Picture of the day.
Alyssa Healy capturing the winning celebration of Indian team. pic.twitter.com/YFgXNrylNp
— Johns. (@CricCrazyJohns) December 24, 2023
போட்டியை வென்று கோப்பையுடன் இந்திய அணி வீராங்கனை கொண்டாடியபோது, அவர்களை ஆஸ்திரேலிய கேப்டன் அலீசா ஹீலி புகைப்படம் எடுத்த நிகழ்வு பலரையும் நெகிழ வைத்தது. இந்திய வீராங்கனைகள் கோப்பையுடன் போஸ் கொடுக்க, அலீசா ஹீலி கூலாக அவர்களுக்காக புகைப்படம் எடுத்து, இந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் எனலாம்.