மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் மாநகராட்சி துணை மேயர் வீடு, அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினரும், மாநகராட்சி துணை மேயருமான தி. நாகராஜன் அலுவலகம், வீடு உள்ளது. இதன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். துணை மேயர் அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் இன்று மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தலைமை வகித்தார்.
இதில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ரா. விஜயராஜன் ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா உள்பட பலர் கலந்துகொண்டனர். மெத்தனத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதனிடையே, மதுரை மாநகராட்சி துணை மேயர் வீடு, அலுவலகம் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக பிரமுகர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. முழு விவரம் > மதுரை துணை மேயர் வீடு, அலுவலகம் மீது தாக்குதல்: இருவர் கைது; திமுக பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்கு