சென்னை: பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீஸார் ஆந்திராவில் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்டோ மதிவாணனும், அவரது மனைவி மெர்லினாவும் தங்களது வீட்டில் பணிபுரிந்த 18 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதலே, ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில், இருவரையும் தமிழக தனிப்படை போலீஸார் ஆந்திரா அருகே கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், உடனடியாக சென்னைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அழைத்து வரப்படும் இருவரிடமும் விசாரணை நடத்தி பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இன்று காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணிடம் அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கி உள்ள நிலையில், திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆந்திரா அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே, தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும், என கோரி இவர்கள் இருவரும் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.