நடிகை ரகுல் ப்ரீத் சிங், தன் நீண்ட நாள் காதலரான நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்யவுள்ளார்.
இவர்களது திருமணம் வரும் பிப்ரவரி 21ம் தேதி தெற்கு கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் நடைபெறவிருக்கிறது. முதலில், வெளிநாட்டில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால், பிரபல நட்சத்திரங்கள் பலருக்கும் இது வசதியாக இருக்காது என கோவாவிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தனர். கடந்த வாரம் முதலே இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றன.

இன்றே பிரபல நட்சத்திரங்கள் பலரும் கோவாவிற்குச் சென்ற வண்ணமிருக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று (19.02.2024) இரவிலிருந்து ஆரம்பித்து மூன்று நாள்களுக்கு ஆடல், பாடல் எனக் கொண்டாட்டத்திற்குப் பல கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. அதேசமயம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் திருமணப் பத்திரிகைகளை டிஜிட்டலில் மட்டும் அனுப்புவது, பட்டாசுகளைத் தவிர்ப்பது, பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதேபோல, சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவுகளாக சுகர்-ப்ரி, ஆயில் ப்ரி, பாயில் ப்ரி உணவுகளெல்லாம் பிரத்தியேகமாகத் தயார் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் தனிப்பட்ட முறையில் டையட் பிளான்கள் இருக்கும், அதையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கேற்ற ஆரோக்கிய உணவுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
குறிப்பாக, திருமணத்தில் ஆங்காங்கே செல்ஃபிக்கள், செல்போனில் போட்டோக்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், திருமணப் புகைப்படக்காரர்களுக்கு மட்டுமே போட்டோக்கள் எடுக்க அனுமதிக்க வேண்டும் எனத் திருமண வீட்டார் விழா ஏற்பாட்டாளர்களிடம் ஸ்ட்ரிக்ட்டாகக் கூறிவிட்டார்களாம். பிரபல நட்சத்திரங்கள், பிசினஸ்மேன்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.