புதுச்சேரி: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான குறைந்தப்பட்ச கூலி தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி புதுச்சேரியில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பாக மே தினம் கொண்டாடப்பட்டது. புதுவை கம்பன் கலை அரங்கில் தூய்மைப் பணியாளர்களை ஒருங்கிணைத்து இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல் நெல்லித்தோப்பு, பவழநகர், இந்திராகாந்தி சிலை, அண்ணா சாலை பகுதிகளில் தொழிலாளர்களை ஆங்காங்கு ஒன்று திரட்டி இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, சுமதி, கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பங்கேற்ற தூய்மை பணியாளர்கள் கோரிக்கை: சென்ற ஆறு மாதங்களுக்கு முன்பாக துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே உடனடியாக இதனை நிறைவேற்றி, குறைந்தபட்ச கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், வழங்காத நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.