மற்ற கட்சிகளைப் போலவே தேமுதிக-வும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி செயலாளராக அங்கீகரித்திருக்கிறது தேமுதிக பொதுக்குழு. கூடவே, கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷையும் தேர்வு செய்திருக்கிறார்கள். வெற்றிக் கூட்டணியில் இடம் பிடிப்பது, கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுப் பெறுவது உள்ளிட்ட சவால்களை தேமுதிக-வும் எதிர்க்கொள்ள இருக்கும் நிலையில், கட்சியின் புதிய பொருளாளர் எல்.கே.சுதீஷ் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது.
தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் உங்களுக்கு உறவு மலர்ந்ததை சுருக்க மாகச் சொல்ல முடியுமா?
எனது தந்தை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றியதால் நான் பிறந்து வளர்ந்து எல்லாமே குடியாத்தத்தில் தான். பள்ளிச் சிறுவனாய் இருந்த போதே கேப்டனின் வெற்றிப் படங்களை குடும்பத்துடன் பார்த்து ரசித்திருக்கிறேன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த நான் அதன் மாணவர் பேரவை தேர்தலில் போட்டியிட்டு செயலாளராக வந்தேன். அந்த சமயத்தில் ஹாஸ்டல் மாணவர்கள் கேப்டனை தனது குடும்பத்தில் ஒருவராக குறிப்பிட்டுப் பேசியது எனக்கும் அவர் மீது ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தியது. பிறகு, இலங்கை தமிழர்களுக்காக கேப்டன் தி.நகரில் நடத்திய உண்ணாவிரதத்தில் சக மாணவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். அப்போதுதான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அடுத்த சில மாதங்களில் அவர் எனது சகோதரியை பெண் பார்க்க வந்திருந்தார். பிறகு, குடும்ப உறுப்பினராகி, அவரை வைத்து ‘நரசிம்மா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்து, கேப்டன் தொடங்கிய கட்சிக்குள்ளும் வந்துவிட்டோம்.
தேமுதிக-வில் அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்ததை எப்படி உணர்கிறீர்கள்?
மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். பொதுச்செயலாளர், அவைத் தலைவருக்கு பிறகு பொருளாளர் என்பது எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் மிக முக்கியமான பதவி ஆகும். தேமுதிக-வில் எனது சகோதரிக்கு முதன்முதலாக கட்சியில் கேப்டன் அளித்த பொருளாளர் பதவி இப்போது எனக்கு கிடைத்துள்ளது. கட்சித் தொண்டர்களின் விருப்பத்துடன் கேப்டனின் ஆசியோடு அதை நான் பெற்றுள்ளேன்.
2005-ல் தென்சென்னை மாவட்டத்தின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ஆனது தான் எனக்குக் கிடைத்த முதல் பதவி. 2006 சட்டப்பேரவை தேர்தலில் குடியாத்தத்தில் போட்டியிட்டேன். அந்தத் தேர்தலுக்கு பின் கேப்டன் என்னை இளைஞர் அணி செயலாளராக்கினார். இப்பதவியில் 11 வருடம் இருந்தபோது ஒரு பெரிய மாநாட்டை சென்னையில் நடத்தினேன். 2017-ல் என்னை துணைப் பொதுச்செயலாளர் ஆக்கினார் கேப்டன். அதைத் தொடர்ந்து இப்போது பொருளாளராக்கப்பட்டு உள்ளேன்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இன்றும் தொடர்கிறதா?
2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் அவர்களோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம். 2024 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகினாலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டோம். இப்போது அதிமுக-வும் பாஜக-வும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இனி, மீண்டும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தேமுதிக அக்கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதை எங்களது பொதுச்செயலாளர் உரிய நேரத்தில் முடிவு செய்வார்.
சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக-வின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
ஜனவரி 9-ல் கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. அதில், தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார். தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக முன்னமே வாக்குக் கொடுத்திருந்ததா அதிமுக? உறுதியாகக் கொடுத்தார்கள். முழுக்க முழுக்க உண்மை இது. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வேன்.
அப்படி யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை என்கிறாரே இபிஎஸ்?
அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் நான் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்ளக்குறிச்சியிலும் 2014-ல் சேலத்திலும் போட்டியிட்டேன். சேலத்தில் எனக்காக மோடி பிரச்சாரம் செய்தார். 2019-ல் மீண்டும் பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டேன். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் யோசிக்கிறேன்.
2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்கும் என்றார் அமித் ஷா. ஆனால், கூட்டணி ஆட்சி என்று அவர் சொல்லவில்லை என்கிறாரே இபிஎஸ்..?
அதிமுக தலைவர்களுடன் பாஜக என்ன பேசியது எனத் தெரியவில்லை. இது இபிஎஸ் மற்றும் அமித் ஷாவுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தை. வேறு யாருக்கும் இதுகுறித்து முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. இருவரும் என்ன பேசினார்கள் என்பது 2026-ல் மக்கள் தீர்ப்புக்குப் பின்னால் தான் தெரியவரும்.
அதிமுக அணிகள் இணைப்பு விவகாரத்தில் கூட்டணித் தோழனாக அதிமுக தலைமைக்கு என்ன யோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?
அவர்கள் நன்கு அறிந்த இந்த விஷயத்தில் நாம் எதுவும் யோசனை கூற வேண்டிய அவசியம் இல்லை. அதுவுமில்லாமல் இன்னொரு கட்சியை பற்றி நாம் ஏன் கருத்துக் கூற வேண்டும்?
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கேட்கும் கட்சிகளில் தேமுதிக-வும் உள்ளதா?
இந்த கேள்வியை இவ்வளவு சீக்கிரம் கேட்கவேண்டியது இல்லை எனக் கருதுகிறேன். தேர்தலுக்கு சுமார் ஒரு வருட கால அவகாசம் இருப்பதால் தேமுதிக மாநாட்டுக்குப் பிறகு இதுபற்றி பேசுவோம்.
இனி கூட்டணி சேரும் கட்சியிடம் ராஜ்ய சபா சீட் கேட்பதும் நிபந்தனையாக இருக்குமா?
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெறுவதில் எங்களுக்கும் விருப்பம் உண்டு. உகந்த வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பற்றி கண்டிப்பாகப் பேசுவோம். அதற்கான தகுதியும் எங்கள் கட்சிக்கு உள்ளது.
விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் நடிகர் விஜய். அவர் அழைத்தால் தவெக கூட்டணிக்கு தேமுதிக சம்மதிக்குமா?
தலைவர் கேப்டன் மீது நடிகர் விஜய்க்கு நல்ல கருத்து இருந்தது. அதேபோல், கேப்டனுக்கும் விஜய்யுடன் நல்ல நட்பு தொடர்ந்தது. திரைத்துறையில் நடிகர் விஜய்யின் வளர்ச்சியில் கேப்டனுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனாலும், நட்பும் அரசியலும் வேறு வேறு. ஆகவே, தவெக உடன் கூட்டணி வைப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் கடலூர் மாநாட்டில்தான் முடிவு செய்வோம்.
உங்கள் கட்சியிலும் திராவிடம் இருக்கிறது. சீமான் திராவிடத்தை ஒழிப்பேன் என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
திராவிடத்தை எப்படி ஒழிக்க முடியும்? தமிழ்நாட்டில் எல்லோருமே பெரியாரை வைத்துத்தான் அரசியல் செய்கிறார்கள். சீமான் சொல்வது அவரது கருத்து. இதை நாம் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எந்த இடத்திலும் இதுவரை தேமுதிக நன்கொடை வசூலிக்காத நிலையில் கட்சியை நடத்துவது கஷ்டமாக இல்லையா?
கேப்டன் நடிப்பில் வந்த செல்வத்தாலும், கட்சித் தொண்டர்களே செலவுகளை செய்து வந்ததாலும், இதுவரையிலும் நாம் யாரிடமும் நன்கொடை பெற்றதில்லை. வேட்பாளர்களும் தங்களது சொந்தப் பணத்தில் தேர்தல் செலவுகளை செய்வார்கள். ஆனால், இப்போது கட்சிக்கு பொருளுதவி தேவைப்படுவதால் இனி நன்கொடை வாங்குவோம். நிதியை நான் இனி திரட்டுவேன்.
வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தவர் கேப்டன். ஆனால், தேமுதிக-வில் உங்கள் சகோதரி, நீங்கள், அடுத்து கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் என வரிசையாக பதவிக்கு வந்திருப்பதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?
ஒரே இரவின் மாற்றத்தில் எங்கள் கட்சிக்குள் வாரிசுகள் எவரும் பதவி பெறவில்லை. ரசிகர் மன்றம் முதல் அனைத்து வேலைகளையும் செய்து கட்சி துவங்கிய பின்பும் நான் தொடர்ந்தேன். சுமார் 20 வருடங்களாக எனது செயல்பாடுகளைப் பார்த்த எங்கள் கட்சித் தொண்டர்கள் எனக்கு ஒரு பதவி அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதால் அதை நான் பெற்றேன். ஏனெனில், ஒரு பதவியும் இல்லாமல் நான் கட்சியில் எந்தவொரு முக்கிய வேலையையும் செய்ய முடியாது. அப்படி செய்தால், நீங்கள் யார் என்ற கேள்வி வரும் என்பதால் இளைஞரணியின் முதல் செயலாளர் பதவி எனக்கு அளிக்கப்பட்டது.
அதேபோல் எனது அக்கா, கேப்டனின் பிரச்சாரங்களில் அவருடன் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தார். அத்துடன் தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்திருந்தமையால் 2019-ல் அவருக்கு பொருளாளர் பதவி அளித்தார் கேப்டன். அடுத்து பொதுச்செயலாளரானார். இதெல்லாம் சுமார் 15 வருடங்கள் கட்சிக்காக உழைத்த பிறகு வந்த பதவிகள்.
விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
விஜய பிரபாகரனும் 2007 முதல் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டு வென்ற அவரது முடிவு சுமார் 4,000 வாக்குகளில் தோல்வி என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், அவருக்கு கட்சியிலும், பொதுமக்களிடமும் செல்வாக்கு இருப்பது தெரிகிறது. இந்நிலையில், கட்சிக்கு இளைஞர் அணி செயலாளராக ஒரு இளைஞர் தேவை என கட்சியினரும் நிர்வாகிகளும் கேட்டமையால் அப்பதவியை அவருக்கு அளித்தோம். தவிர, எடுத்தவுடன் அவருக்கு பதவி கொடுத்துவிடவில்லை.
திடீரென தமிழக அரசின் நடவடிக்கைகளை பிரேமலதா பாராட்டியது திமுக அபிமானத்தைப் பெறும் முயற்சியாகக் கருதப்படுகிறதே?
எதிர்க்கட்சி என்றாலே எந்நேரமும் ஆளும் கட்சியை குற்றம் கூறி விமர்சிக்க வேண்டும் என்பது அல்ல. தப்பை எடுத்துக் கூறி விமர்சிப்பதும், நல்லவற்றைப் பாராட்டுவதும்தான் சரியான எதிர்க்கட்சி. அதைத்தான் நாங்கள் கேப்டன் காலம் தொட்டு செய்து வருகிறோம். 2011-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கேப்டன் எதிர்க்கட்சி தலைவராகி நல்லவற்றைப் பாராட்டியும் தவறுகளை தட்டியும் கேட்டார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை விடைபெற்று நயினார் நாகேந்திரன் வந்திருக்கிறாரே..?
நாகேந்திரனுக்கு வாழ்த்துகள். அண்ணாமலை எனது நல்ல நண்பர். அவருக்கு இதை விட உயர்ந்த பதவியை பாஜக தலைமை அளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.