ஆர்சிபி கொண்டாட்டத்தில் துயரம்: பெங்களூரு மைதான கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்

பெங்களூரு: ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட இன்று (ஜூன் 4) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஆர்சிபி அணியை பாராட்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) நடத்தும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், காயமடைந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டது.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், “இன்று கூடிய கூட்டம் கட்டுப்படுத்த முடியாதது. அதிக கூட்டத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். இது ஓர் இளம் துடிப்பான கூட்டம், அவர்கள் மீது நாங்கள் லத்தியைப் பயன்படுத்த முடியாது” என்று கூறினார்

நேற்று இரவு முதல் ஆர்சிபி வெற்றியை கொண்டாடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இரவு முழுவதும், காவல் துறையினர் கூட்டத்தை நிர்வகிப்பதிலும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை பெங்களூருவில் தரையிறங்கிய ஆர்சிபி அணியினரை கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்றார். அவர் ஒவ்வொரு வீரருக்கும் பூங்கொத்துகளை வழங்கினார். குறிப்பாக விராட் கோலியை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவருக்கு ஆர்சிபி அணியின் கொடி மற்றும் கன்னட கொடி இரண்டையும் அவர் வழங்கினார். இதனையடுத்து, ஆர்சிபி அணியினரை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் விதான் சவுதாவில் அவர்களைப் பாராட்டினர். தற்போது ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டம் பெருந்துயரமாக மாறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.