உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா தாக்குதல் நடத்தியிருக்காது: அமெரிக்காவில் சசி தரூர் விளக்கம்

புதுடெல்லி: உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்தார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர்ப் பதற்றம் நிலவியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி அழித்தது. இந்நிலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பாக, உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது.

இதில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஒரு குழுவும் ஒன்று. இந்தக் குழுவில் எம்.பி.க்கள் சர்பராஸ் அகமது, காந்தி ஹரிஷ் மதுர் பாலயோகி, சஷாங்க் மணி திரிபாதி, புவனேஸ்வர் கலிதா, மிலிந்த் தியோரா, தேஜஸ்வி சூர்யா, அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தரஞ்சித் சந்து ஆகியோர் அடங்குவர்.

இந்தக் குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது, சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

இதைத் தொடர்ந்து நியூயார்க்கில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சசி தரூரும், அவரது குழுவினரும் பங்கேற்று விளக்கமளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபராக இருக்கும் சசி தரூரின் மகன் இஷான் தரூர், கேள்வி கேட்க எழுந்தார். அப்போது அங்கு தனது மகனை கண்ட சசி தரூர் புன்னகைத்தபடியே, “இவர் என்னுடைய மகன்” என்று கூறி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்தார்.

அப்போது பேசிய இஷான் தரூர், “வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் நான் இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, இந்தியா மீதான பாகிஸ்தானின் ஆரம்ப தாக்குதல் குற்றத்துக்கான ஆதாரங்களைக் காட்டுமாறு மற்ற நாடுகளின் அரசுகள் உங்களிடம் கேட்டிருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது இஷானின் கேள்விக்கு சசி தரூர் பதிலளித்துப் பேசியதாவது: நீ இந்த கேள்வி எழுப்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, அதனால் எங்களிடம் ஆதாரம் எதுவும் கேட்கப்படவில்லை. ஆனால், ஊடகங்கள் 2 அல்லது 3 இடங்களில் இதைக் கேள்வியாக எழுப்பின. உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா இதை செய்திருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன்.

பாகிஸ்தானில் இருந்து 37 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான தீவிரவாதத் தாக்குதல்கள் இந்தியா மீது நிகழ்ந்து வருகின்றன, அதற்கு தொடர்ச்சியான மறுப்புகளும் உள்ளன. அதாவது, ஒரு கன்டோன்மென்ட் நகரத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள ஒரு பாகிஸ்தானிய பாதுகாப்பான வீட்டில் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்படும் வரை, அவர் எங்கே இருக்கிறார் என்று பாகிஸ்தானுக்குத் தெரியாது என்று கூறப்படுவதை அமெரிக்கர்கள் மறந்துவிடவில்லை. அதுதான் பாகிஸ்தான்.

மும்பை தாக்குதல் நடந்தபோது அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் மறுத்தனர். எனவே, பாகிஸ்தான் யார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் தீவிரவாதிகளை அனுப்புவார்கள். அவர்கள் பிடிபடும் வரை அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று மறுப்பும் சொல்வார்கள். இவ்வாறு சசி தரூர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.