தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பணிக்கர்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. பல இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கயத்தாறு அருகே பணிக்கர்குளம் கிராம பகுதியில் தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமான துணை மின் நிலையம் உள்ளது. இந்நிலையம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுரை வரை மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள ஒரு மின்மாற்றியில் திடீரெனத தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கோவில்பட்டி, கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 9 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்மாற்றியில் ஆயில் அதிகம் உள்ளதால் வெப்பம் அதிகரித்து வெடித்துவிடக் கூடாது என்பதற்காக நுரை தீயணைப்பான் (Foam) கொண்டு மின்மாற்றியை குளிரூட்டி தீயணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தீ சிறிது கட்டுக்குள் வந்ததும், பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி தீ முழுமையாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வட்டாட்சியர் சுந்தர ராகவன், காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் மின்வாரிய அலுவலர்கள் அங்கு சென்று, தீயணைக்கும் பணிகளை துரிதப்படுத்தினர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பணிக்கர்குளம் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் தீ பரவலை தடுக்கும் கருவி (nitrogen suppression system) பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அது வேலை செய்யவில்லை. காலை 6 மணி முதல் தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு மொத்தம் 4 மின்மாற்றி அலகுகள் உள்ளன. ஒரு மின்மாற்றியில் மட்டும் தீப்பிடித்தது. மற்ற மின்மாற்றிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் கிடையாது” என்றனர்.