’அவருக்கு ஈடாக பந்துவீச்சாளர்கள் இருக்காங்க’ பும்ராவை ஓரங்கட்ட தொடங்கிய கவுதம் கம்பீர்..!

Gambhir on Bumrah: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்துள்ளு. அங்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் லீட்ஸில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த சூழலில் பும்ரா குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அவருக்கு இணையான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும், ஜஸ்பிரித் பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும், ஆனால் எந்த மூன்று டெஸ்ட் போட்டிகள் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் கம்பீர் கூறியுள்ளார். “ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒருவரை மாற்றுவது எப்போதும் கடினம், ஆனால் எங்களிடம் போதுமான தரமான பவுலர்கள் இருக்கிறார்கள்” என்று கம்பீர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். “சாம்பியன்ஸ் டிராபியின் போதும் நான் இதை முன்பே கூறியிருக்கிறேன், அவர் ஒரு தரமான (பந்து வீச்சாளர்) என்பதை நான் அறிவேன், ஆனால் அணியில் எங்களுக்கு போதுமான தரம் உள்ளது” என்றும் கூறினார்.

சுப்மன் கில் பேசும்போதும், இந்திய அணி எந்த சூழ்நிலையிலிருந்தும் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியும். பும்ராவை மட்டுமே நம்பி அணி இல்லை. அவர் இல்லாமலும் அணி வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார். “நாங்கள் போதுமான பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம், எங்களிடம் போதுமான வேகப்பந்து வீச்சாளர் உள்ளனர், மேலும் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த சூழ்நிலையிலிருந்தும் எந்த நிலையிலிருந்தும் டெஸ்ட் போட்டிகளை வெல்லக்கூடிய சிறந்த இடத்தில் உள்ளனர்,” என்று சுப்மன் கில் கூறினார்.

கம்பீர் பேசும்போது “நாங்கள் பும்ரா உடன் ஒரு விவாதம் நடத்த விரும்புகிறோம், அது இங்கிலாந்து தொடரை பொறுத்தது. தொடரின் முடிவுகள் எங்கு செல்கிறது என்பதையும் பொறுத்து பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து முடிவெடுப்போம். பும்ராவுக்கு அதிகமாக பணிச்சுமை கொடுக்கக்கூடாது என்பதே எங்களுடைய விருப்பம். அது முக்கியமானதும் கூட” என்று அவர் கூறினார்.

நான் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்தே அழுத்ததில் தான் இருக்கிறேன். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணங்களின்போது அழுத்தத்தில் இருந்தேன் என்பது உண்மை தான். இப்போதும் அந்த அழுத்தம் இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றியை பெற வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். அதற்காகவே எல்லோரும் சரியான முடிவுகளை எடுக்க விரும்புகிறோம் என கம்பீர் கூறினார்.

இதனை தொடர்ந்து சுப்மன் கில் பேசும்போது, என்னை பொறுத்தவரை எல்லா பிளேயர்களுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறேன். அவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது பாதுகாப்பாக உணர வைப்பது மட்டுமே என்னுடைய வேலை. மற்றபடி களத்தில் பேட்டிங் ஆடும்போது நான் ஒரு பேட்ஸ்மேனாக விளையாட விரும்புகிறேன், ஒரு பேட்ஸ்மேனாக முடிவுகளை எடுக்க விரும்புகிறேன்.” என்று கூறினார். கவுண்டி சுற்றுகளில் விளையாடிய கருண் நாயரின் அனுபவமும் அவரது சமீபத்திய ஃபார்மும் இங்கிலாந்தில் உள்ள இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கம்பீர் கூறினார்.

“கவுண்டி கிரிக்கெட்டிலும் கொஞ்சம் விளையாடிய கருணின் அனுபவம் அணிக்கு உதவும். அவர் உண்மையிலேயே நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் இந்தியா ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்திருக்கிறார். குறிப்பாக இதுபோன்ற சுற்றுப்பயணங்களில் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் இருப்பது எப்போதும் நல்லது. அவரது அனுபவம் நிச்சயமாக கைகொடுக்கும், மேலும் அவர் சிறப்பாக ஆட முடியும் என்று நம்புகிறேன்.” என கம்பீர் கூறினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.