Rahul Dravid grief: 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. 18 வருட காத்திருப்பு என்பதால், கோப்பையை வென்றதை அந்த அணி விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு பெங்களூருவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. ஆனால் அந்நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு மாறாக அசம்பாவிதமே ஏற்பட்டது.
ரசிகர்கள் அலைமோதியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர். இதற்கு பலரும் தங்களது கண்டனங்களையும் இரங்கலையும் தெரிவித்து வந்தனர். ஆர்சிபி அணியை தடை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விஷயத்தில் இதுவரை அமைதியாக இருந்த ராகுல் டிராவிட் தற்போது மவுனம் கலைத்துள்ளார்.
இச்சம்பவம் அவரது மனதை உலுக்கிவிட்டதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இச்சம்பவம் என் மனதை உலுக்கிவிட்டது, நிச்சயமாக மிகவும் வருத்தமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல். பெங்களூரு மக்கள் ஆர்சிபி அணிக்கு மட்டுமல்ல பிற விளையாட்டுகளையும் கொண்டாடுவார்கள்.
கால்பந்து அணியாக இருந்தாலும் சரி, கபடி அணியாக இருந்தாலும் சரி அனைத்து விளையாட்டு அணிகளையும் அங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகவும் பிரபலமான அணி. இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷடவசமானது. ரொம்பவே வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும் என ராகுல் டிராவிட் கூறினார்.
இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து ஆர்சிபி அணி நிர்வாகிகள் 4 பேர் ஜூன் 6ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். சின்னசாமி மைதானத்தை நகரின் மையத்தில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஏ. ஷங்கர் மற்றும் பொருளாளர் ஈ.எஸ். ஜெய்ராம் ஆகியோர் தங்களது பதவியில் இருந்து விலகி உள்ளனர்.
மேலும் படிங்க: இந்திய அணியில் இடம் இல்லை.. அதனால் இங்கிலாந்து செல்லும் சிஎஸ்கே வீரர்!
மேலும் படிங்க: WTC Final: ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா – பிளேயிங் லெவன், பலம், பலவீனம் என்ன?