“அன்று ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டோர் இன்று…” – ஆக்ஸ்போர்டு யூனியனில் தலைமை நீதிபதி கவாய் உரை

புதுடெல்லி: “பல ஆண்டுகளுக்கு முன்பு, லட்சக்கணக்கான இந்திய குடிமக்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இன்று, அந்த மக்களைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் நீதித்துறையில் மிக உயர்ந்த பதவியை வகிப்பவராக வெளிப்படையாகப் பேசும் இடத்தில் இருக்கிறோம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

இந்தியாவின் மிக உயர்ந்த நீதித் துறைப் பதவியை வகிக்கும் இரண்டாவது பட்டியலினத்தவர் மற்றும் முதல் பவுத்தரான தலைமை நீதிபதி கவாய், ஆக்ஸ்போர்டு யூனியனில் ஆற்றிய உரையில், “பல தசாப்தங்களுக்கு முன்பு, இந்தியாவின் மில்லியன் கணக்கான குடிமக்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் தூய்மையற்றவர்கள் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்களால் தங்களுக்காகப் பேச முடியாது என்று சொல்லப்பட்டது. ஆனால், இன்று நாம் இங்கே இருக்கிறோம், அந்த மக்களைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் நீதித் துறையில் மிக உயர்ந்த பதவியை வகிப்பவராக வெளிப்படையாகப் பேசும் இடம் இது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதைத்தான் செய்தது.

இந்திய மக்களுக்கு அவர்கள் சொந்தம் என்றும், தங்களுக்காகப் பேச முடியும் என்றும், சமூகம் மற்றும் அதிகாரத்தின் ஒவ்வொரு துறையிலும் அவர்களுக்கு சமமான இடம் உண்டு என்றும் அரசியலமைப்புச் சட்டம் கூறியது. இன்று ஆக்ஸ்போர்டு யூனியனில், நான் உங்கள் முன் நின்று கூறுகிறேன்: இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடிமக்களுக்கு, அரசியலமைப்புச் சட்டம் வெறும் சட்டப்பூர்வ சாசனம் அல்லது அரசியல் கட்டமைப்பு அல்ல. அது ஓர் உணர்வு, உயிர்நாடி, மையில் பதிக்கப்பட்ட அமைதியான புரட்சி. ஒரு நகராட்சிப் பள்ளியிலிருந்து இந்தியத் தலைமை நீதிபதி அலுவலகம் வரையிலான எனது வாழ்க்கை பயணத்தில், அது ஒரு வழிகாட்டும் சக்தியாக இருந்து வருகிறது” என்று தலைமை நீதிபதி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆழ்ந்த சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் அனைவரும் சமம் என்று அரசியலமைப்புச் சட்டம் பாசாங்கு செய்யவில்லை. அதற்கு பதிலாக, அது தலையிடவும், அதிகாரத்தை மறுசீரமைக்கவும், கண்ணியத்தை மீட்டெடுக்கவும் துணிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், கேட்கப்பட வேண்டியவர்களின் இதயத் துடிப்பை தன்னுள் கொண்டுள்ளது. மேலும் அது தொலைநோக்குப் பார்வையையும் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் உரிமைகளைப் பாதுகாக்க மட்டுமல்லாமல், மேம்படுத்தவும், உறுதிப்படுத்தவும், தீவிரமாக சரிசெய்யவும் அரசை கட்டாயப்படுத்துகிறது.

சமத்துவமற்ற சமூகத்தில், அதிகாரம் நிறுவனங்களுக்கிடையில் மட்டுமல்லாமல், சமூகங்களுக்கிடையில் பிரிக்கப்படாவிட்டால் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது என்று அம்பேத்கர் நம்பினார். எனவே, பிரதிநிதித்துவம் என்பது சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித் துறைக்கு இடையில் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக பங்கு மறுக்கப்பட்ட சமூகக் குழுக்களிடையேயும் அதிகாரத்தை மறுபகிர்வு செய்வதற்கான ஒரு வழிமுறையாகும்” என்று தலைமை நீதிபதி கவாய் தனது உரையில் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.