சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கும், உதவி வனப் பாதுகாவலர் பணிக்கும் பொதுவான குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஏறத்தாழ 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப்-1 பதவிகளில் 70 காலியிடங்களையும் குரூப்-1ஏ பதவியில் (உதவி வனப் பாதுகாவலர்) பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ பொது முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது.
மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 987 தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வெழுதுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.