சேலம்,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.
இந்நிலையில், தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கிய 10-வது லீக்கில் முன்னாள் சாம்பியனான பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணியுடம் மோதியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜித்தேந்திரா 42 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 15.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது முதல் இரு ஆட்டங்களில் திருப்பூர், நெல்லை ராயல் கிங்சை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இன்று கோவையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ பெற்றியை பதிவு செய்துள்ளது.