சேலம்,
டி.என்.பி.எல். தொடரில் இன்றிரவு 7.15 மணிக்கு தொடங்கிய 2-வது ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேலம் அணி ஆரம்பம் முதலே நெல்லை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் 12 ரன்களிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் டக் அவுட்டிலும், நிதிஷ் ராஜகோபால் 9 ரன்களிலும், கவின் மற்றும் சன்னி சந்து தலா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஹரி நிஷாந்த் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணி 100 ரன்களை கடக்க உதவினார். சிறப்பாக விளையாடிய அவர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் முகமது (28 ரன்கள்) பொறுப்புடன் விளையாட சேலம் அணி கவுரமான நிலையை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் அடித்தது. நெல்லை தரப்பில் அசத்தலாக பந்து வீசிய சச்சின் ரதி 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதனையடுத்து 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான குருசாமி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சந்தோஷ் குமார் அதிரடி காட்டினார். அவர் 36 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இறுதியில் நெல்லை அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றது.