ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவு கொண்டாட சென்றபோது கணவனை காதலருடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சோனம் ரகுவன்சி தனது கணவன் ராஜா ரகுவன்சியை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் தலைமறைவாக இருந்தபோது ரூ.5,000 ரூபாய்க்கு மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சோனம்-ராஜா ரகுவன்சி திருமணம் கடந்த மே 11-ம் தேதி நடைபெற்றது. மே 20-ல் தேனிலவு கொண்டாட மேகாலயாவுக்கு சென்ற போது ராஜாவை அவரது மனைவி சோனமும் அவரது காதலரும் சேர்ந்து கொலை செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ராஜா ரகுவன்சியை கொலை செய்து விட்டு சோனம் மற்றும் அவரது காதலர் ராஜ் குஷ்வாகா ஆகியோர் மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள திவாஸ் நாகா அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, அடிக்கடி வெளியே செல்லக்கூடாது என்பதற்காக சோனத்தின் காதலர் குஷ்வாகா ரூ.5,000-க்கு மளிகைப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். போலீஸார் விசாரணையின்போது இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் இன்னும் ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராஜா ரகுவன்சியின் மூத்த சகோதரர் சச்சின் ரகுவன்சி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ சோனம் மற்றும் குஷ்வாகாவிடம் மேகாலயா போலீஸார் நார்கோ சோதனை நடத்த வேண்டும்.
அப்போதுதான் எனது தம்பி கொலை செய்யப்பட்டதற்கான முழு உண்மையான காரணம் வெளிவரும். சோனம் குடும்பத்தாருக்கு குறிப்பாக அவரது அம்மாவுக்கு குஷ்வாகவுடன் திருமணத்துக்கு முன்பே தொடர்பு இருப்பது தெரியும். விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்துவதுடன், குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை வங்கித் தரவேண்டும்” என்றார்.