புதுடெல்லி: வாரத்திற்கு 38 சர்வதேச விமானங்களை குறைக்க முடிவு செய்துள்ள ஏர் இந்தியா நிறுவனம் ஜூன் 21 முதல் ஜூலை 15 வரை 3 வெளிநாட்டு சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அகலம் அதிகமாக உள்ள விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக 15% குறைப்பதாக ஏர் இந்தியா நேற்று அறிவித்தது. மேலும், கடந்த சில நாட்களாக பல்வேறு விமான சேவைகளை பாதுகாப்பு கருதி நிறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா இன்று(ஜூன் 20) வெளியிட்ட அறிக்கையில், வாரத்திற்கு 38 சர்வதேச விமானங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குறைப்புகள் ஜூன் 21 முதல் அமலுக்கு வரும், குறைந்தது ஜூலை 15 வரை நீடிக்கும்.
மேலும், ஜூன் 21 முதல் ஜூலை 15 வரை 3 வெளிநாட்டு சேவைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி-நைரோபி, அமிர்தசரஸ்-லண்டன் (கேட்விக்) மற்றும் கோவா (மோபா)-லண்டன் (கேட்விக்) ஆகிய 3 வழித்தடங்களில் ஏர் இந்தியாவின் விமான சேவை ஜூலை 15 வரை நிறுத்தப்படும்.
டெல்லி-நைரோபி வழித்தடத்தில் வாரத்திற்கு நான்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அமிர்தசரஸ்-லண்டன் (கேட்விக்) மற்றும் கோவா (மோபா)-லண்டன் (கேட்விக்) வழித்தடங்களில் வாரத்திற்கு மூன்று விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஜூலை 15 வரை இந்த வழித்தடங்களில் இந்த விமான சேவை இருக்காது.
மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தூர கிழக்கு நாடுகளை இணைக்கும் 18 சர்வதேச வழித்தடங்களில் விமானங்கள் குறைக்கப்படும்.
வட அமெரிக்காவில் உள்ள வழித்தடங்களில் டெல்லி-டொராண்டோ, டெல்லி-வான்கூவர், டெல்லி-சான் பிரான்சிஸ்கோ, டெல்லி-சிகாகோ மற்றும் டெல்லி-வாஷிங்டன் ஆகிய வழித்தடங்களில் விமான சேவைகள் குறைக்கப்படும்.
ஐரோப்பாவில் டெல்லி-லண்டன் ஹீத்ரோ, பெங்களூரு-லண்டன் ஹீத்ரோ, அமிர்ஸ்தர்-பர்மிங்காம் மற்றும் டெல்லி-பர்மிங்காம், டெல்லி-பாரிஸ், டெல்லி-மிலன், டெல்லி-கோபன்ஹேகன், டெல்லி-வியன்னா மற்றும் டெல்லி-ஆம்ஸ்டர்டாம் ஆகிய வழித்தடங்களில் விமான சேவை குறைக்கப்படுகிறது.
இதேபோல், டெல்லி-மெல்போர்ன், டெல்லி-சிட்னி, டெல்லி-டோக்கியோ ஹனேடா மற்றும் டெல்லி-சியோல் (இஞ்சியான்) ஆகிய வழித்தடங்களிலும் விமான சேவைகள் குறைக்கப்படுகின்றன.
விமானப் பயணத்திற்கு முந்தைய பாதுகாப்பு சோதனைகளை தானாக முன்வந்து மேற்கொள்வதற்காகவும், மத்திய கிழக்கில் வான்வெளி மூடல்களால் ஏற்படும் கூடுதல் கால அளவுகளைக் கருத்தில் கொண்டும் இந்த குறைப்புகள் ஏற்படுகின்றன.
எங்கள் அட்டவணையில் இந்த தற்காலிகக் குறைப்பு உங்கள் பயணத் திட்டங்களைப் பாதிக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.