`எதிர்கால தலைமுறையின் அழிவுக்கு பங்களிக்கிறது' – பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தாலிபன்கள் தடை

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தாலிபன்கள் விதித்த தடை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரமான காந்தஹார் மாகாணத்தில் செயல்படும் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், பள்ளிகள் மற்றும் மதப்பள்ளிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு இந்த தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆப்கானிஸ்தானின் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவானது, ஷரியா இசுலாமியர்களது மனநிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் எதிர்கால தலைமுறையின் அழிவுக்கு பங்களிக்கிறது. கல்வியொழுக்கம் மற்றும் கவனத்தை மேம்படுத்தவே இந்த தடையானது அமல் செய்யப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கன் மாகாணம் முழுவதுமுள்ள பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே முரண்பாடான கருத்துகள் பதிவாகியுள்ளது. 

மொபைல்

அமலுக்கு வந்துள்ள தடை குறித்து கருத்து தெரிவித்த 22 வயது ஆசிரியரான சயீத் அஹமத், “நாங்கள் தடை அமலுக்கு வந்த நாள் முதல், பள்ளிக்கு ஸ்மார்ட்போன்களை கொண்டு வரவில்லை. கல்வி மீது அதிக ஆர்வத்தை வளர்க்க இந்த முடிவு வழிவகுக்கும் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். தடை அமல் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மதப்பள்ளியான மதராஸாவில் பயிலும் மாணவர் மொஹமத், “முழுமையான தடை அமலுக்கு வந்ததால், இனி எவரும் பள்ளிக்கு ஸ்மார்ட்போன்களை கொண்டு வரமாட்டார்கள்” என கூறினார்.  

அமலுக்கு வந்த தடை பற்றி பேசிய 11 ஆம் வகுப்பு மாணவர் முகமது அன்வர், “ஆசிரியர்கள் ஏதேனும் மாணவர் கைப்பேசி கொண்டு வருவதைக் கண்டால், அந்த மாணவர்களைத் தேடத் தொடங்கி அதில் கவனம் செலுத்துவர்” என நிலையை விளக்கினார். தடை குறித்து கருத்து பகிர்ந்த மற்றொரு 12 ஆம் வகுப்பு மாணவர், “ஐக்கிய நாடுகள் சபை விவரித்த பாலின இனவெறி கட்டுப்பாடுகளின் பகுதியாக, மேல்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேரத் தடை அமலிலுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் தடையானது கற்றலை மேலும் தடுக்கும். ஆசிரியர் கரும்பலகையில் எழுதிய பாடத்தை ​​பின்னர் எழுதுவதற்காக நான் அடிக்கடி என் ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதை பழக்கமாக வைத்திருந்தேன். இனி என்னால் அது போன்ற செயல்களை செய்ய இயலாது. இந்த முடிவானது நிச்சயம் எங்கள் கல்வி மீது எதிர்மறையான பாதிப்பை உண்டாக்கும்” என கூறினார்.

தாலிபன்

இந்த தடை குறித்து பேசிய 28 வயது பாதுகாப்புப் படை உறுப்பினர், “இது தலைவர்களின் உத்தரவு என்பதால், நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு இப்போது ஒரு ஸ்மார்ட்போன் அல்லாத சாதாரண போன் கிடைத்துவிட்டது. நான் சில சமயங்களில் என் ஸ்மார்ட்போனில் முன்பு வாட்ஸ்அப் பயன்படுத்தினேன். ஆனால் இப்போது அதைப் பயன்படுத்துவதில்லை” என தெரிவித்தார். ஆப்கனின் காந்தஹாரில் உள்ள சில தாலிபன் அதிகாரிகள், தங்கள் ஸ்மார்ட்போன்களை சாதாரண செல்போனாக மாற்றிவிட்டு அதன் எண்களைப் பகிர்ந்து கொண்டு, ஆன்லைன் ஆப்களின் பயன்பாடுகளை குறைக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

தாலிபன்களின் தலைமை தலைவரான ஹிபதுல்லா அகுந்த்சாடா, அதிகாரிகள் மற்றும் அறிஞர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என கடந்த வாரமே வலியுறுத்தி இருந்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ், டென்மார்க் மற்றும் பிரேசில் போன்ற பல நாடுகளது வகுப்பறைகளின் உள்ளே சமீப ஆண்டுகளாக போன்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.