ட்ரம்ப் நினைத்தால் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும்: ஈரான்

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய ஈரான் அதிபரின் ஆலோசகர் மஜித் ஃபராஹானி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைத்தால் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் இஸ்ரேல் – ஈரான் போரை எளிதாக நிறுத்த முடியும். ஈரான் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் வரை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது.

டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேலின் வான்வழி குண்டுவீச்சுகளை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுக்கும்.” என்று கூறினார்.

ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்களுடன் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ஜெனீவாவுக்கு பயணம் செய்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ‘இஸ்ரேல் முதலில் அதன் தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை’ என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் அமெரிக்கா தெரிவிக்க முடியும் என்றும் ஈரான் தெரிவித்துள்ள கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த டொனால்டு ட்ரம்ப், “இப்போது அந்த கோரிக்கையை வைப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைப் பார்க்கும்போது நிறுத்துவது மிகவும் கடினம். இஸ்ரேல் சிறப்பாக போர் புரிகிறது. ஈரானின் செயல்பாடு குறைவாகவே உள்ளது என்று நீங்கள் கூறுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். யாரையாவது நிறுத்தச் சொல்வது கொஞ்சம் கடினம்.

ஒருவர் வெற்றிபெறக்கூடிய நிலையிலும், ஒருவர் தோற்கும் நிலையிலும் இருக்கும்போது போர் நிறுத்தம் என்பது சற்று கடினம். எனினும், போர் நிறுத்தம் ஏற்பட நாங்கள் தயாராகவும், விருப்பமாகவும் இருக்கிறோம். நாங்கள் ஈரானுடன் பேசி வருகிறோம், என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” என்று தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.