புதுடெல்லி,
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் இரு நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அங்கு வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு அந்தந்த நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதன்படி இந்திய அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
‘ஆபரேஷன் சிந்து’ என்ற இந்த நடவடிக்கையில் முதல்கட்டமாக கடந்த 18-ந் தேதி ஒரு சிறப்பு விமானத்தில் 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து பத்திரமாக அழைத்துவரப்பட்டனர். அவர்களை டெல்லி விமான நிலையத்தில் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் வரவேற்றார்.
அப்போது அவர், மாணவர்களையும், அங்கு வசிக்கும் இந்தியர்களையும் அழைத்துவர மேலும் நடவடிக்கை தொடரும் என்றார். அதன்படி மாணவர்களும், இந்திய குடிமக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியர்கள் உள்ளிட்டோர் வெளியேறுவதற்காக ஈரான் தனது வான்வெளியை திறந்து விட்டுள்ளது. இதனால் வான் போக்குவரத்தில் இருந்த பிரச்சினை நீங்கியது. இதற்கிடையே, ஈரானின் டெக்ரானில் இருந்து மஷாத் என்ற இடத்துக்கு மாணவர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்கள் 1,000 பேர் அழைத்துவரப்பட்டனர்.
அவர்களில் 290 பேரை ஈரான் விமானமான மஹான் ஏர்லைன்ஸ் ஏற்றிக்கொண்டு டெல்லி வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் டெல்லியில் இறங்கிய அந்த விமானத்தை எதிர்நோக்கி அவர்களுடைய குடும்பத்தினர் காத்திருந்தனர். அவர்கள் தரையிறங்கி உறவினர்களைப் பார்த்ததும் அங்கே மகிழ்ச்சி ஆரவாரம் பொங்கியது.
டெல்லி வந்த 290 பேரில் 190 பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை அழைத்துச் செல்ல ஜம்மு காஷ்மீர் போலீசாரும் விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர். மீட்கப்பட்டவர்களில் புனித யாத்ரீகர்களும் இருந்தனர். இதற்கிடையே நேற்று அதிகாலை ஈரானில் இருந்து வந்த விமானத்தில் 117 பேரும், மாலையில் வந்த மற்றொரு விமானத்தில் 310 பேரும், இரவு வந்த விமானத்தில் 290 பேரும் டெல்லி வந்தனர். இவ்வாறு இதுவரை ஈரானில் இருந்து 1,117 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.