இஸ்ரேல் நகரங்களில் இடைவிடாது ஒலிக்கும் சைரன்: விடாப்பிடியாக தாக்கும் ஈரான்

டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ‘போரை முடிவுக்குக் கொண்டுவருவோம்’ என்ற எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் புதிதாக ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் பல நகரங்களில் ஓயாமல் சைரன் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஜெருசலேமில் பயங்கர குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன என ஊடகங்கள் தெரிவித்தன.

ஈரான் – இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், இன்றும் ஈரானிலிருந்து ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் ஏவுகணைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் சைரன்கள் ஒலித்தன. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறிது நேரத்திற்கு முன்பு, ஈரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இஸ்ரேல் முழுவதும் ஜெருசலேம் உள்பட பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரேலின் அஷ்டோட், லாச்சிஷ் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்டோட் பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜெருசலேம் நகருக்கு தெற்கே உள்ள லாச்சிஷ் பகுதியில் நடந்த தாக்குதலால் கடும் சேதம் ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஜெருசலேம் பகுதியில் மிகவும் சத்தத்துடன் குண்டு வெடிப்பு ஒலிகள் கேட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. ஜெருசலேம் மீது ஏவுகணைகள் உயரமாக பறப்பதையும் இஸ்ரேல் ஊடகங்கள் செய்தியாக்கியுள்ளன.

மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலை நோக்கி அதிகளவில் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் சைரன்கள் மூலம் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நஹாரியா, கெஷர் ஹாசிவ், ஹிலா, மியோனா மற்றும் மியில்யா உள்ளிட்ட நகரங்களில் சைரன்கள் ஒலித்து வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: இதனிடையே, ஈரான் ஆயுதப் படைகளின் மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஈரான் ஆயுதப் படைகளுக்கான சட்டப்பூர்வ இலக்குகளை விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா தனது செயல்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்பார்க்க வேண்டும். ட்ரம்ப், நீங்கள் ஒரு சூதாட்டக்காரர். நீங்கள் இந்தப் போரைத் தொடங்கலாம், ஆனால் நாங்கள்தான் அதை முடிவுக்குக் கொண்டுவருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.