தெஹ்ரான்,
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் அப்போது தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஈரான் கூறியது.
இதனையடுத்து, இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை வெளியிட்டார். இந்த தாக்குதலுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் உலக நாடுகள் விமர்சனங்களை வெளியிட்டன. ஒரு சில நாடுகள் நடுநிலையாக இருந்து விட்டன.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், டிரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி ஈரானின் வெளியுறவு துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சி கூறும்போது, போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரை நிறுத்துவது பற்றிய இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும். அந்த முடிவை எங்களுடைய தலைவரே மேற்கொள்வார். வேறு நாடுகளின் தலையீட்டிற்கு இதில் அனுமதி இல்லை என கூறியுள்ளார்.
போரை மேற்கத்திய நாடுகளே தொடங்கின. அதனால், போரை நிறுத்துவது பற்றி ஈரானே முடிவு செய்யும். இஸ்ரேல் போரை நிறுத்தினால், நாங்களும் நிறுத்துவோம். ஈரான் மக்களுக்கு எதிரான சட்டவிரோத தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், அதன்பின்னர் போரை தொடருவதற்கான எந்தவித உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஞாயிற்று கிழமை அராக்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா உள்ளது. ஆனால், ஐ.நா.வின் விதிகளை மீறி பெரும் தவறை செய்துள்ளது.
சர்வதேச சட்டங்களையும் மற்றும் அணு ஆயுத பரவல் தடை சட்டம் ஆகியவற்றை மீறும் வகையில், ஈரானின் அமைதியான அணு ஆயுத நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள், தீராத தொடர் விளைவுகளை கொண்டிருக்கும்.
ஐ.நா.வின் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு நாடும் இந்த ஆபத்து தரும், சட்டவிரோத மற்றும் குற்ற அணுகுமுறையால் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
ஐ.நா. அமைப்பின் ஆவணங்கள் மற்றும் அதன் பிரிவுகளின்படி, சுய பாதுகாப்புக்கு சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் வகையில், ஈரான் தன்னுடைய இறையாண்மை, நலன் மற்றும் மக்களை பாதுகாக்க எல்லாவித வாய்ப்புகளையும் வைத்திருக்கிறது என்ற தகவலை வெளியிட்டார். இதனால், ஈரான் போரை தீவிரப்படுத்தும் முயற்சியில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று தாக்குதலை தொடுத்தது.
இதனை தொடர்ந்து அவர் கடந்த ஞாயிறு மதியம் ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு புறப்பட்டு சென்றார். அவர் ரஷியாவின் அதிபர் புதின் மற்றும் பிற உயர் அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். அந்நாட்டின் உதவியையும் அவர் கோருவார் என பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு உதவுவோம் என புதினும் அறிவித்துள்ளார். இந்நிலையில், போர்நிறுத்தம் பற்றிய டிரம்பின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து உள்ளது.