ஆளும் கட்சியாக இருந்தாலும் அடிமட்ட திமுக-வினருக்கு ஆயிரம் மனக்குறைகள் இருக்கின்றன. அதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புகளில் ஆர்வமாக பங்கெடுக்கும் உடன்பிறப்புகள், தங்களது மனக்குமுறலை கொட்டி ஆறுதல் தேட முடியாமல் பேருக்கு வந்து போய்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்கு முன்பும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்தி இருக்கிறார் ஸ்டாலின். அப்போதெல்லாம், மாவட்டச் செயலாளர்கள், உள்ளிட்டோர் மீது கீழ்மட்ட நிர்வாகிகள் ஏராளமான குற்றச்சாட்டுகளைக் கொட்டி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்த விடியலும் ஏற்படவில்லை. மாறாக, சில இடங்களில் குறைகளைச் சொன்னவர்களே குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் இப்போது, ஒன் டு ஒன் என்று சொல்லி நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து வருகிறார் ஸ்டாலின். ஒரு தொகுதிக்கு 12 நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தும் அவர், ஒரு நிர்வாகிக்கு 5 நிமிடங்கள் ஒதுக்குகிறார். இது ஒன் டு ஒன் சந்திப்பு எனச் சொல்லப்பட்டாலும் ஒன் டு செவன் சந்திப்பாகவே நடக்கிறது.
ஸ்டாலினுடன் அவரது தனி செயலாளர் தினேஷ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், அன்பகம் கலை, தாயகம் கவி, ஆஸ்டின் என ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். நேர்காணலுக்கு வரும் நிர்வாகிகளிடம் கட்சியில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்பதற்கு பதிலாக தனது கையிலுள்ள ரிப்போர்ட்டில் இருக்கும் விவரங்களை அவர்களிடம் கேட்டு சரி பார்க்கிறார் ஸ்டாலின்.
சம்பந்தப்பட்ட நிர்வாகியின் செயல்பாடுகள், அவரது பகுதி சார்ந்த கட்சி பிரச்சினைகள், எதிர்க்கட்சியின் பலம் ஆகியவை ஸ்டாலின் கையில் இருக்கும் ரிப்போர்ட்டில் இருக்கிறது. அதன் மீதான தனது சந்தேகங்களை கேட்டுத் தெளிந்து கொண்டு நிர்வாகிக்கு விடை கொடுக்கிறார். யாராவது மற்ற பிரச்சினை குறித்து பேச ஆரம்பித்தால், அங்கிருக்கும் மற்றவர்கள் குறுக்குக் கேள்வி கேட்டு அவரை வாயடைக்க வைத்துவிடுவதாகச் சொல்கிறார்கள். இதனால், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தங்களுக்கு இருக்கும் மன வருத்தத்தை சொல்லமுடியாமலேயே வந்தவர்கள் திரும்பிவிடுகிறார்கள்.
ஸ்டாலினுடன் அமர்ந்திருக்கும் மற்ற நிர்வாகிகள் சதா அறிவாலயத்தில் இருப்பவர்கள். அதனால் இவர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் பரிச்சயமான நட்பு இருக்கும். அப்படி இருக்கையில், மாவட்டச் செயலாளர்கள் பற்றி குறை சொன்னால் இவர்களில் யாராவது சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு அதைச் சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? என திமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர், “ஜெயலலிதா இருந்த போது கொளப்பாக்கத்தில் நேர்காணல் நடத்தினார். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 13 ஆயிரம் பேர் வரைக்கும் அந்த நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்கள். அத்தனை பெரிய கூட்டத்தில் குத்துமதிப்பாக யாரிடமாவது மைக்கைக் கொடுத்து பேசவைப்பார். அந்த நபர் யாரைப் பற்றி குறை சொல்கிறாரோ அது குறித்து உடனே விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நிர்வாகி யாராக இருந்தாலும் அவர்களை பொறுப்பிலிருந்து தூக்கிவிடுவார். அதனால், அம்மா நேர்காணல் என்றாலே அதிமுக-காரர்கள் அலறினார்கள். அது போன்ற நடவடிக்கை எல்லாம் திமுக-வில் இல்லை. பிறகு என்ன நம்பிக்கையில் நிர்வாகிகள் உண்மை நிலவரத்தைச் சொல்ல முன்வருவார்கள்?
நேரில் சொல்லமுடியாததை எழுதி பெட்டியில் போடச் சொல்கிறார்களே… இதற்கு முன்பு வைத்த பெட்டிகளில் போட்ட மனுக்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அந்தப் பெட்டியை ஸ்டாலினா திறந்து பார்த்து மனுக்களை படிக்கப் போகிறார்? ஆக மொத்தத்தில், இது ஒரு சம்பிரதாய சடங்கு என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை” என்கிறார்கள்.
இதுகுறித்து திமுக மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவிடம் கேட்டதற்கு, “தலைவருடனான இந்தச் சந்திப்பில் நிர்வாகிகள் தங்களது கருத்துகளை எந்தவித தயக்கமோ, அச்சமோ இல்லாமல் எடுத்துச் சொல்கிறார்கள். கட்சியில் உள்ள பிரச்சினைகளையும் தயக்கமின்றி சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கான பிரச்சினை என்றால் தலைவர் உடனடி நடவடிக்கை எடுக்கிறார்.
நேர்காணலின் போது தலைமைக் கழக நிர்வாகிகளை உடன் வைத்துக் கொள்வது ஒரு பேரியக்கத்தின் மரபு. அவர்கள் இல்லாமல் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளரோ, மாவட்ட அமைச்சரோ அங்கிருந்தால் குறை சொல்லலாம். முந்தைய சந்திப்புகளில் சொல்லப்பட்ட குறைகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல், நிர்வாகிகள் சொல்லும் குறைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது தான் தலைமையின் பண்பு. எனவே, தலைவருடனான இந்த சந்திப்பு நிர்வாகிகளுக்கும் தலைமைக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக இருக்கிறது என்பதே நிஜம்” என்றார்.
பிரசன்னா இப்படிச் சொன்னாலும், இத்தனை நாள் விட்டுவிட்டு ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் வந்து கருத்துக் கேட்பதால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற மனநிலையில் தான் பெருவாரியான நிர்வாகிகள் இருக்கிறார்கள்.