“மதுரையில் நடந்தது மோடி பக்தர்கள் மாநாடு” – திருமாவளவன்

திருச்சி: “மதுரையில் நடைபெற்றது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் இன்று (ஜூன் 26) கூறியதாவது: “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் பேச்சுவார்த்தையில் அதை பார்த்துக் கொள்வோம். பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்.

திரையுலகில் போதை கலாச்சாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியாக உள்ளது. புகழ்பெற்றவர்கள் பலர் போதையின் பிடியில் சிக்கி சீரழிகிறார்கள். எனவே, தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். இதர போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை அவமதிக்கும் வகையில் வீடியோ ஒளிபரப்பியது ஏன்? என்று அவர்கள்தான் விளக்க வேண்டும். அந்த மாநாடு முருக பக்தர்கள் மாநாடாக இல்லாமல், மோடி பக்தர்களின் மாநாடாக நடைபெற்றுள்ளது” என்று திருமாவளவன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.