பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததால் எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு

குயிங்தவோ: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இதனால் கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை.

கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எஸ்சிஓ அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு சீனாவின் குயிங்தவோ நகரில் கடந்த 25, 26-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

மாநாட்டின் இறுதி நாளான நேற்று கூட்டறிக்கையை வெளியிட முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் இறுதியில் கூட்டறிக்கை தயார் செய்யப்பட்டது. இந்த கூட்டறிக்கையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரயில் கடத்தல் சம்பவம் குறித்து குறிப்பிடப்பட்டு, கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதன்காரணமாக அமைச்சர் ராஜ்நாத் சிங், எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையெழுத்திடவில்லை. இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக எஸ்சிஓ கூட்டறிக்கை வெளியிடப்படவில்லை. இவ்வாறு மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

எஸ்சிஓ மாநாட்டில் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பங்கேற்றார். சீனா உட்பட பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு துறை அமைச்சர்களுடன் ஆசிப் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிபை சந்தித்துப் பேசவில்லை. மாநாட்டின்போது பாகிஸ்தான் அமைச்சரை, அவர் முழுமையாக புறக்கணித்தார்.

அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை: முன்னதாக எஸ்சிஓ மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் அந்த நாட்டுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

உலகின் அமைதி, பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக தீவிரவாதம் உருவெடுத்திருக்கிறது. தீவிரவாத அமைப்புகளின் கைகளில் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் ஒருபோதும் சிக்கக் கூடாது. மேலும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள், அவர்களுக்கு புகலிடம் அளிப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும். சில நாடுகள் (பாகிஸ்தான்) எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தங்களது அதிகாரப்பூர்வ கொள்கையாக பின்பற்றி வருகின்றன. ஒருபுறம் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பது, மறுபுறம் தீவிரவாதத்தை எதிர்ப்பது போன்று நடிப்பது என்ற இரட்டை நிலைப்பாட்டை ஒருபோதும் ஏற்க முடியாது

தீவிரவாதத்தின் ஆணி வேரை கண்டறிய வேண்டும். அந்த ஆணி வேரை அறுத்தெறிய வேண்டும். அப்போதுதான் தீவிரவாத பிரச்சினைக்கு நிரந்தர முடிவு கட்ட முடியும். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் எந்த நாட்டில் (பாகிஸ்தான்) ஒளிந்து இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத முகாம்கள் எந்த நாட்டில் (பாகிஸ்தான்) செயல்பட்டாலும், துல்லிய தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டது. அப்போது உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் உணர்த்தப்பட்டது. தற்போது பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

சீனாவின் நிங்போ நகரில் எஸ்சிஓ அமைப்பின் எரிசக்தி அமைச்சர்களின் 2 நாட்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் மரபுசாரா எரிசக்தி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

நம்பகமான நட்பு நாடு இந்தியா: ரஷ்ய அமைச்சர் புகழாரம் – சீனாவின் குயிங்தவோ நகரில் நடைபெற்ற எஸ்சிஓ பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் டோங் ஜுன் உடன் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிபும் ஈரான் பாதுகாப்பு தறை அமைச்சர் ஆசிஷ் நசீர்ஜாடேவும் அதிக நெருக்கம் காட்டினர். பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் கூறும்போது, “சீனா எங்களின் நண்பன், சகோதரன்” என்று புகழாரம் சூட்டினார். இஸ்ரேல், ஈரான் போரின்போது ஈரானுக்கு சீனா ஆதரவு அளித்தது. இதற்காக ஈரான் அமைச்சர் ஆசிஷ் நசீர்ஜாடே சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.

எஸ்சிஓ மாநாட்டின்போது இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ரஷ்ய அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவும் அதிக நெருக்கம் காட்டினர். இருவரும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் கூறும்போது, “ரஷ்யாவின் மிக நெருங்கிய, நம்பகமான நட்பு நாடு இந்தியா. இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியாக வலுவான உறவு நீடிக்கிறது. தொழில்நுட்ப துறையிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுகின்றன” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.