வாஷிங்டன்,
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் நேற்று மதியம் 12.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். முன்னதாக விண்வெளி பயணத்தின் துவக்கத்தின்போது “ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்..” என்று முழங்கி, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில், ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலம் விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. பின்னர் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்தனர். ஏற்கனவே அங்கு இருக்கும் விண்வெளி வீரர்கள் அவர்களை வரவேற்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(ISS) சென்ற பிறகு, தங்கள் பயணம் குறித்து பேசிய சுபான்ஷு சுக்லா பேசியதாவது;-
“நமது பூமியை இப்படி ஒரு நேர்த்தியான இடத்தில் இருந்து பார்க்க முடிந்த ஒரு சில பேரில் நானும் ஒருவனாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி பயணம் அற்புதமாக உள்ளது. நான் விண்வெளிக்கு வர ஆவலுடன் காத்திருந்தேன். நான் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த காட்சி மிஞ்சிவிட்டது.
நான் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த நிமிடம், இங்குள்ள குழுவினர் (ஏற்கனவே ISS-ல் உள்ள Expedition-73 குழுவினர்) என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நீங்கள் உண்மையில் உங்கள் வீட்டின் கதவுகளை எங்களுக்காக திறந்தீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி.
அடுத்த 14 நாட்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்வதிலும், ஒன்றிணைந்து செயல்படுவதிலும் அற்புதமான அனுபவங்கள் கிடைக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.”
இவ்வாறு சுபான்ஷு சுக்லா தெரிவித்தார்.