லீட்ஸ்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. இது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக இளம் வீரரானா ஜெய்ஸ்வால் மட்டும் முதல் இன்னிங்சில் 4 கேட்சுகளை தவறவிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், முன்னணி வீரரான பும்ரா ஆகியோர் ஜெய்ஸ்வாலுக்கு ஆதரவளித்தனர்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் கேட்சுகளை பிடிக்க முடியாமல் தவற விட்டதற்கான காரணம் குறித்து இந்திய முன்னாள் வீரரான முகமது கைப் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது பின்வருமாறு:- “யசஷ்வி ஜெய்ஸ்வால் ஏன் கேட்சுகளை தவற விட்டார்? ஏனெனில் டியூக் பந்துகளில் பயிற்சி செய்கிறோம். அதில் நாம் காயத்தை சந்திக்கும்போது பாதுகாப்பு டேப் போட்டுக் கொள்வோம். அதை அணியும்போது விரல்களால் சுதந்திரமாக நகர முடியாது. அது போன்ற சூழ்நிலையில் உங்களால் கேட்சுகளை பிடிக்க முடியாது. ஏனெனில் அந்த டேப் ஸ்பான்ச் போல மாறி விடும். அதனால் பந்து அதன் மீது பட்டு குதிக்கிறது. அதுதான் அதில் உள்ள குறைபாடு. பந்துடனான இயல்பான தொடர்பை நாம் இழக்கக்கூடாது” என்று கூறினார்.