புதுடெல்லி: பாரத தேசத்தின் மண்ணிலும் நீரிலும் இந்துத்வா ஆழமாக கலந்துள்ளது என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். இந்துத்துவா உலகளவிலாவிய அன்பு மற்றும் அகிம்சையை விரும்புகிறது, பலவீனத்தை அல்ல என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தி தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஒன்றுடனான பிரத்யேக பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார். “நாங்கள் அகிம்சை மீது நம்பிக்கை கொண்டவர்கள். அது வலிமையால் மட்டுமே சாத்தியமாகிறது. ‘இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்’ என இப்போது நாம் சொல்லிக் கொண்டு இருந்தால் நமது நிலத்தை சீனா ஆக்கிரமிக்கும்.
பாரத தேசத்தின் மண்ணிலும் நீரிலும் இந்துத்வா ஆழமாக கலந்துள்ளது. அனைவருக்கும் நன்மையை மட்டுமே இந்துத்துவா விரும்புகிறது. ஆனால், அது நமது தேசத்துக்கு தீங்கு ஏற்படுத்த வேண்டும் என எண்ணுபவர்களுக்கு மட்டும் எதிராக இருக்கும்.
பிரதமர் மோடி அதை தனது செயல்பாடு மூலம் நிரூபித்துள்ளார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், ஏர் ஸ்ட்ரைக் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் போன்றவை அதற்கு உதாரணம். இந்த ராணுவ நடவடிக்கை இன்று அவசியமாகிறது” என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.