டெல் அவிவ்,
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்பினார். டெல் அவிவ் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த நெதன்யாகு, ‘பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்’ என ஆவேசமாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், போர் நிறுத்தத்திற்கான டிரம்ப்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்ச திட்டத்திற்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் வேண்டும் என்பதே நமது நிலைப்பாடே தவிர ஒருபோதும் அதற்கு தனிநாடு அங்கீகாரம் அளிக்க மாட்டோம்” என்றார்.
இந்தநிலையில் டிரம்ப் முன்வைத்த காசா அமைதித் திட்டத்தை ஹமாஸ் மறுபரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஹமாஸ் தரப்பு கூறுகையில், “டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. தலைமை உறுப்பினர்கள் மற்றும் தகவல்தொடர்பு சிக்கல்கள் காரணமாக இந்த பேச்சுவார்த்தை முடிவதற்கு சில நாட்கள் எடுக்கும். அதன்பின்னர்தான் இதற்கு முழுமையான தீர்வு காணப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.