வாஷிங்டன்,
காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு வருடமாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போது நிகழாத நிகழ்வாகும் எனவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது ; இஸ்ரேலும், ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். அரபு, முஸ்லிம் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக, எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கியின் மத்தியஸ்தர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அமைதியை ஏற்படுத்துபவர்கள் பாக்கியவான்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.