நியூயார்க்,
அமெரிக்காவின் தெற்கே டென்னஸ்ஸி மாகாணத்தின் ராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மக்களுக்கும் கேட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கின. சிலர் வெடிவிபத்து ஏற்பட்ட காட்சிகளை அவர்களுடைய கேமராவில் படம் பிடித்தனர்.
இதில், 19-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்களை காணவில்லை. இந்த வெடிவிபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால், 19 பேரும் உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி அவர்களுடைய குடும்பத்தினருடன் அதிகாரிகள் பேசி வருகின்றனர். விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. விசாரணை தொடர்ந்து சில நாட்கள் நீடிக்கும் என அதிகாரிகள் கூறினர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், அவசரகால மேலாண் கழகத்தின் அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் நிலைமை ஓரளவுக்கு சீரானது என கூறப்படுகிறது. எனினும், தொடக்கத்தில் அதிகாரிகள் ஆலைக்கு சென்றபோது, உள்ளே நுழையாதபடி தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்துள்ளது. இது நம்முடைய சமூகத்தில் ஏற்பட்ட சோக சம்பவம் என மேயர் பிராட் ராக்போர்டு தெரிவித்து உள்ளார்.