ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 8 அன்று கடலுக்குச் சென்ற ஹரி கிருஷ்ணன், ஜோசப், நெப்போலியன், ஜெபமாலை ராஜா ஆகியோருக்குச் சொந்தமான நான்கு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, படகுகளிலிருந்த 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாக ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழமற்ற கடற்பகுதிகளில் நங்கூரமிடப்பட்டிருந்தது. மேலும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தக இழப்பும் ஏற்பட்டுள்ளது.