திண்டுக்கல், வத்தலகுண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். வாகன பர்மிட், லைசென்ஸ் வழங்குவது, பதிவு எண் கொடுப்பது, போன்ற பல்வேறு சேவைகளுக்கு புரோக்கர் வைத்து பணம் பெற்று வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் நேற்று திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் போக்குவரத்து அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.
இதில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே தனியார் வாகன புகை பரிசோதனை மையம் செயல்பட்டு வந்தது. இதில் மையத்தில் இருக்கும் உச்சப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜ் (34), சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த அஜய் ஜான்சன் (25) என்பவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில் இவர்கள் இருவரிடமும் கணக்கில் வராத ரூ.1,12,220 ரொக்கம், அரசு ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். இந்த இருவரையும் புரோக்கர்களாக வைத்து வாகன ஆய்வாளர் இளங்கோவன் பணம் வசூலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோவனிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.