புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ.13,500 கோடி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் நாடுகடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் மெகுல் சோக்ஸியை கைது செய்தது பெல்ஜியம். நிதி மோசடி தொடர்பான வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி இந்தியா தரப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதை எதிர்த்து மெகுல் சோக்ஸி தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் அவரை நாடுகடத்தலாம் என பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மெகுல் சோக்ஸி தரப்பு முறையிட உள்ளதாக தகவல். அவருக்கு விமானத்தில் பயணிப்பதில் சிக்கல் இருப்பதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியாவுக்கு சாதகமாக இந்த உத்தரவு வந்துள்ளது. இந்தியாவின் நாடுகடத்தல் தொடர்பான கோரிக்கையை ஏற்று பெல்ஜியம் அதிகாரிகள் மெகுல் சோக்ஸியை கைது செய்தது சரியான நடவடிக்கை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது” என்று இந்திய தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னணி என்ன? – பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி மெகுல் சோக்ஸி மீது புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக 2018-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அவர் தலைமறைவானார்.
அவர் ஆன்டிகுவா தீவில் தஞ்சமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், ஆன்டிகுவா தீவில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக அவர் பெல்ஜியம் வந்தார். கடந்த ஆண்டு முதல் அவர் பெல்ஜியத்தில் இருந்து வருகிறார்.