பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் குளறுபடி செய்து பரபரப்பை உருவாக்கிய நிலையில், நிதிஷ் குமாரை முதல்வராக அறிவிக்க மாட்டோம் என பாஜக சொல்லியுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான பிஹார், தற்போது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியாத சூழலில், பிஹாரில் நிதிஷ் குமார் கட்சியின் எம்.பி.க்களே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க முக்கிய காரணமானார்கள்.
மக்களவைத் தேர்தலில் பிஹாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 30 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 9 தொகுதிகளிலும் வென்றது. இந்தச் சூழலில்தான் பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், பாஜக கூட்டணி மற்றும் ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கியமானதாக மாறியுள்ளது.
243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்பப் பெறும் கடைசி நாள் வரை, தொகுதிப் பங்கீட்டை முடிக்காமல் அடித்துப் பிடித்துக்கொண்டு ஆளாளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர் மகா கூட்டணியினர்.
மகா கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ (எம்எல்), விஐபி கட்சி, சிபிஐ, சிபிஎம், ஜேஎம்எம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. கடந்த ஒரு மாதமாகவே இந்தக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தும், கடைசி வரை குழப்பம் நீடித்தது. முதல்கட்டத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை, எந்தக் கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது உறுதியாகவில்லை. இதனால், 8 தொகுதிகளில் மகா கூட்டணி கட்சிகள் தங்களுக்கு இடையிலேயே போட்டியிடும் சூழல் உருவானது.
அதன்பின்னர்தான் மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி நிலையை எட்டியது. இதன்படி மகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஆர்ஜேடி 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் 60 தொகுதிகளிலும், சிபிஐ (எம்எல்) 20 தொகுதிகளிலும், விஐபி கட்சி 15 தொகுதிகளிலும், சிபிஐ 9 தொகுதிகளிலும், சிபிஎம் 4 தொகுதிகளிலும், ஐஐபி கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
ஜார்க்கண்டில் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு பிஹார் – ஜார்க்கண்ட் எல்லைப் பகுதிகளில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. எனவே, அக்கட்சி மகா கூட்டணியில் குறைந்தது 2 தொகுதிகளாவது கேட்டது. ஆனால், ஆர்ஜேடி கடைசி வரை பிடி கொடுக்காததால் ஜேஎம்எம்-க்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் அக்கட்சி பிஹார் தேர்தலை புறக்கணித்துள்ளது.
ஜார்க்கண்ட்டில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியில் ஆர்ஜேடிக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். அமைச்சரவையிலும் ஆர்ஜேடிக்கு ஒரு இடம் கொடுத்துள்ளார் ஹேமந்த் சோரன். எனவே, ஜேஎம்எம் விலகல் எல்லைப் பகுதிகளில் மகா கூட்டணிக்கு சிறிய சரிவை உருவாக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
கூட்டணி குழப்பம்: தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா?
பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் இணைந்து ராகுல் காந்தி நடத்திய ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ பெரும் வரவேற்பை பெற்றது. அதுபோல பலம் பொருத்திய கட்சிகளும் மகா கூட்டணியில் இருந்தது ஆளும் ஜேடியு – பாஜக கூட்டணிக்கு பயத்தை உருவாக்கியது. இதனால்தான் தேர்தல் நெருக்கத்தில் முதல்வர் நிதிஷ் குமார் பல்வேறு தரப்பினருக்கும் எண்ணிலடங்கா அறிவிப்புகளை வெளியிட்டு மக்களுக்கு பணமழையை பொழிந்தார்.
அதேபோல தொகுதிப் பங்கீட்டிலும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், சிராக் பாஸ்வானுக்கு 29, ஹெச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கி முந்திக்கொண்டது தேசிய ஜனநாயக கூட்டணி.
‘வாக்காளர் அதிகார யாத்திரை’க்காக இந்தியா முழுவதும் உள்ள இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிஹாருக்கு வந்தார்கள். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்குத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ராகுலும், தேஜஸ்வியும் முன்வைத்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதே வேகத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து உடனடியாக தேர்தல் பணிகளில் மகா கூட்டணி இறங்கியிருந்தால், அது அவர்களுக்கு கூடுதல் பலமாக மாறியிருக்கும். மகா கூட்டணியில் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு குழப்பத்தை வைத்து, அவர்களை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி.
2020 தேர்தல் மிக நெருக்கத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது மகா கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளை வென்ற நிலையில், மகா கூட்டணியில் ஆர்ஜேடி 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75-ல் வென்று தனிப்பெரும் கட்சியானது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19-ல் மட்டுமே வென்றது. இடதுசாரிகள் 16 இடங்களில் வென்றன. மகா கூட்டணி மொத்தம் 110-ல் வெற்றி பெற்றிருந்தது.
இந்த முறை கூடுதல் கட்சிகளும் இணைந்துள்ளதால் வெற்றி நிச்சயம் என நம்பி வருகிறார் தேஜஸ்வி யாதவ். அதே நேரத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு, பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் என தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றி நம்பிக்கையில் உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்தாலும், நிதிஷ் குமாரின் கட்சி, பாஜக மீது அதிருப்தியில் உள்ளது. எப்போதும் ஐக்கிய ஜனதா தளம்தான் அதிக தொகுதிகளில் போட்டியிடும். ஆனால் இம்முறை ஜேடியு – பாஜக தலா 101 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியது ஜேடியு கட்சியினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதுபோல ‘தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே முதல்வர் யார் என முடிவு செய்வோம்’ என அமித் ஷா அறிவித்துள்ளது நிதிஷை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனால் ஜேடியு – பாஜக தொண்டர்கள் களத்தில் முழு மூச்சோடு வேலை செய்வது தடைபட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். அதேபோல சிராக் பாஸ்வானின் கட்சியினரும், நிதிஷ் குமார் கட்சிக்கு முழு ஈடுபாட்டோடு வேலை செய்வார்களா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.
நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது, தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியதால் மகா கூட்டணி மகிழ்ச்சியில் உள்ளது. ஆனாலும், பிரசாந்த் கிஷோரின் கட்சி, ஓவைசியின் கட்சி ஆகியவை ஆர்ஜேடி-யின் வாக்கு வங்கிக்கு சேதாரத்தை உருவாக்கும் எனச் சொல்லி தேசிய ஜனநாயக கூட்டணியும் தெம்போடு இருக்கிறது.
கட்சிகளிடையே ஏற்பட்ட கசப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி, மகா கூட்டணி என இரு பக்கமுமே பாதகத்தை உருவாக்கிய நிலையில், தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாகப் போகிறது என்பது நவம்பர் 14-ல் தெரிந்துவிடும்.