பிஹார் தேர்தல்: என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – தேஜஸ்வி யாதவ் கேள்வி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, பிஹாரில் மாற்றத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகாகட்பந்தனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி. கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள அனைத்தையும் செய்வேன். தற்போது ஆட்சியில் உள்ள 20 ஆண்டு கால அரசாங்கத்தை நாங்கள் ஒன்றிணைந்து முடிவுக்குக் கொண்டு வருவோம்.

எங்கள் கூட்டணி சார்பில் நாங்கள் அனைவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளோம். நான் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆனால், எதிர்தரப்பின் நிலை என்ன? தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? இதுவரை அவர்கள் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை, தொலைநோக்குத் திட்டம் என்ன என்பதையும் வெளியிடவில்லை.

அந்த கூட்டணி பிஹாரில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அவர்கள் எப்போதும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். இந்த முறை நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக ஏன் அறிவிக்கவில்லை? நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார் என்பதை அமித் ஷாவின் பேச்சு தெளிவாக காட்டுகிறது. நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திப்போம், தேர்தலுக்குப் பிறகு, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரைத் தேர்வு செய்வார்கள் என அமித் ஷா கூறிவிட்டார்.

நிதிஷ் குமார் முதல்வராவதை பாஜக விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. மகாராஷ்டிராவில்கூட ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலை எதிர்கொண்டார்கள். பின்பு வேறு ஒருவர் முதல்வர் ஆனதைப் பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அவர்கள் தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளத்தை அழித்து விடுவார்கள். முகேஷ் சஹானி மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர். அவரைத் தவிர மற்ற துணை முதல்வர்களும் இருப்பார்கள்.

பிஹார் மக்கள் எங்களுக்கு 5 ஆண்டுகள் அல்ல, 20 மாதங்கள் கொடுத்தால்கூட, 20 ஆண்டுகளில் இவர்கள் செய்யாததை 20 மாதங்களில் நாங்கள் செய்து முடிப்போம். அரசு வேலை இல்லாமல் பிஹாரில் எந்தக் குடும்பமும் இருக்காது என்ற உறுதியை நாங்கள் அளிக்க விரும்புகிறோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டோம். நான் என் வார்த்தையைக் காப்பாற்றுவேன். நான் சொன்னதைச் செய்வேன். பிஹாரை முதல் மாநிலமாக மாற்றுவதே எனது ஒரே கனவு” என தெரிவித்துள்ளார்.

பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.