2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்…மாற்று வீரரை தேர்வு செய்வதில் குழப்பம்

மும்பை,

பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது நாளிலேயே படுதோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன் இலக்கை கூட துரத்த முடியாமல் இந்திய அணி 35 ஓவர்களில் வெறும் 93 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி கவுகாத்தியில் தொடங்க உள்ளது. முன்னதாக முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான வலியால் பாதியில் வெளியேறிய இந்திய கேப்டன் சுப்மன் கில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அத்துடன் அந்த போட்டியிலிருந்து விலகினார். இதனால் அவர் 2-வது இன்னிங்சில் பேட் செய்யவில்லை. இந்த நிலையில் சுப்மன் கில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதன் காரணமாக கவுகாத்தியில் தொடங்கும் 2-வது டெஸ்டில் இருந்து கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரிஷப் பண்ட் 2வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட உள்ளார்.

மேலும் கில்லுக்கு பதில் யாரை களமிறக்கலாம் என குழப்பம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அணியில் உள்ளனர். இந்த 2 பேரில் ஒருவரை களமிறக்க பயிற்சியாளர் கம்பீர் திட்டமிட்டுள்ளார்.

இருப்பினும் இந்திய அணியில் ஏற்கனவே 5 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர் . சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் இருவரும் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் 2 பேரில் ஒருவரை களமிறக்குவதில் குழப்பம் நீடித்து வருகிறது. அணியில் இடம் பெறாமல் இருக்கும் வீரரை அணியில் சேர்க்கலாமா என்பது தொடர்பாகவும் பயிற்சியாளர் கம்பீர் ஆலோசித்து வருகிறார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.