டாக்கா,
வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (டிசம்பர்) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டி தொடர் திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்து இருக்கும் வங்காளதேச கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர், ‘இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து எதுவும் குறிப்பிடவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா, வங்காளதேசம் இடையே சமீபகாலமாக நிலவும் அரசியல் பதற்றமே கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கடந்த ஆகஸ்ட் மாதம் வங்காளதேசம் சென்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாட இருந்தது. அந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோடப்பட்டது குறிப்பிடத்தக்கது.