பெங்களூரு,
கேரள அரசின் தலைமை செயலாளருக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
கேரளாவில் உள்ள சபரிமலைக்கு கர்நாடகத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக மண்டல பூஜையையொட்டி நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்களில் அதிகளவில் பக்தர்கள் அங்கு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை தாங்கள் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
உரிய போக்குவரத்து வசதிகளை செய்வது, மருத்துவ உதவி, அவசர உதவி சேவைகள், போக்குவரத்து நிலையங்களில் மருத்துவ அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது போன்ற விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் உரிய வசதிகளை செய்ய வேண்டும்.
கன்னடம் உள்ளிட்ட பன்மொழி அறிந்தவர்களை கொண்டு உதவி மையங்களை தொடங்க வேண்டும். அவசர நேரத்தில் கர்நாடக அரசின் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். கேரள அரசு வழங்கும் ஒத்துழைப்பை நாங்கள் நேசத்துடன் மதிக்கிறோம். இந்த ஆண்டு ஆன்மிக யாத்திரை எந்த பிரச்சினையும் இன்றி நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.