ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டம் மோகன்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஹல்வீந்தர் சிவ்பூஜன்பால் (வயது 30). இவர் இன்று காலை போலீஸ் பயிற்சி மையத்தில் சக போலீசாருடன் இணைந்து தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஹல்வீந்தரின் துப்பாக்கி எதிர்பாராத விதமாக திடீரென வெடித்தது. இதில், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு ஹல்வீந்தரின் தலையில் பாய்ந்தது. இதில் போலீஸ்காரர் ஹல்வீந்தர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, ஹல்வீந்தரின் உடலை மீட்ட சக போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.