அன்று இந்தியா… இன்று இங்கிலாந்து – ஹெட்டை பாராட்டிய ரவி சாஸ்திரி

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் தொடக்க நாளில் 19 விக்கெட் சரிந்ததுடன், 2-வது நாளுக்குள் போட்டியே முடிவுக்கு வந்து விட்டது.

இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 205 ரன் இலக்கை ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் (123 ரன், 83 பந்து, 16 பவுண்டரி, 4 சிக்சர்) அதிரடி சதத்தால் 28.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ரவிசாஸ்திரி, ஆஷஸ் டெஸ்டில் சதம் அடித்து கலக்கிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “டிராவிஸ் ஹெட்… இரண்டு ஆண்டுக்கு முன்பு எங்கள் நாட்டின் (இந்தியா) மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு முடிவுகட்டி அமைதிக்குள் மூழ்கடித்தீர்கள். இன்று மீண்டும் அதேபோல் செய்துள்ளீர்கள். அதுவும் சிறந்த வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில், தீவிரமான பாணியில் விளையாடி மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடியிருக்கிறீர்கள். தலை வணங்குகிறேன். இங்கிலாந்துக்கு எதிராக என்பது கூடுதல் சிறப்பானது” என்று பதிவிட்டுள்ளார்.

2023-ம் ஆண்டில் ஆமதாபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து (137 ரன்) கோப்பையை தட்டிப்பறித்ததை குறிப்பிட்டு ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.